பரப்பன அக்ரஹாரா சிறைவாசலில் காத்திருக்கும் ஷீலா பாலகிருஷ்ணன்…
பெங்களூர்: பெங்களூர் சிறையில் உள்ள ஜெயலலிதாவை சந்திக்க ஷீலா பாலகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே அவர் பரப்பன அக்ரஹாரா சிறை முன் கடந்த 3 மணி நேரமாக ஷீலா பாலகிருஷ்ணன் காத்திருந்தார். ஷீலா பாலகிருஷ்ணனுடன் சென்ற வெங்கட்ராமன் உள்ளிட்டோரும் காத்திருந்தனர்.
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறியது. இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தானாகவே முதலமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்து விட்டார்.
ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது.அத்துடன் அவர்களுக்கு விதிக்கப்படும் சிறை தண்டனை காலமும் சேர்த்து கணக்கிடப்படும். அதன்படி, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால் அவர் மொத்தம் 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஷீலா பாலகிருஷ்ணன்
இந்நிலையில், தமிழக அரசின் ஆலோசகரும், முன்னாள் தலைமை செயலருமான ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் புறப்பட்டுச் சென்றனர்.
அடுத்த முதல்வர் யார்?
அங்கு, பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவை சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், தமிழகத்தின் அடுத்த முதல்வர் குறித்தும் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
4 மணிநேரமாக காத்திருப்பு
இந்நிலையில், பெங்களூர் சிறையில் உள்ள ஜெயலலிதாவை சந்திக்க ஷீலா பாலகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், பரப்பன அக்ரஹாரா சிறை முன் கடந்த 4 மணி நேரமாக ஷீலா பாலகிருஷ்ணன் காத்திருக்கிறார்.
அதிகாரிகளும் காத்திருப்பு
அதேபோல வெங்கடராமன் உள்ளிட்ட அதிகாரிகளும் காத்திருக்கின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால் இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதனால், ஜெயலலிதாவை சந்திக்க சிறப்பு அனுமதி கேட்டு சிறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.