ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவோம்... கருணாநிதியை சந்தித்த பின் சீதாராம் யெச்சூரி
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவோம். அதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாள் விழாவும், கருணாநிதி அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில் வைர விழாவும் நேற்று சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் மதசார்பற்ற கட்ச்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓபராயன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யெச்சூரி சந்திப்பு
இந்நிலையில் சென்னை வந்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார் நேற்றே கருணாநிதியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். கருணாநிதியை இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் எம்பி உள்ளிட்டோர் சந்தித்தனர்.
யெச்சூரி பேட்டி
இந்த சந்திப்புக்கு பிறகு சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், திமுக தலைவர் கருணாநிதியை பார்த்தேன். மருத்துவர்களிடமும் அவரது உடல் நிலையை கேட்டறிந்தேன்.
ஜனாதிபதி தேர்தல் ஓரணியில்
அவர் நன்றாக குணமடைந்து வருவதாக தெரிவித்தனர். கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவுக்கு வந்த தலைவர்கள் அனைவரும் ஜனாதிபதி தேர்தலுக்கு ஒன்றிணைந்து செயல்படுவோம்.
ஆலோசித்து முடிவு
ஏற்கெனவே டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் 17 கட்சிகளின் தலைவர்கள் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்திருக்கிறோம். எனவே அனைவரும் இணைந்து எங்களது வேட்பாளர் யார்? என்பதை தேர்வு செய்வோம். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களையும் ஆலோசித்து முடிவு எடுப்போம் என்றார் அவர். இதேபோல் கருணாநிதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி, தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. ஆகியோரும் சந்தித்தனர்.