நேரு கூட வெளிநாடுகளுக்கு இப்படி போனதில்லையே... மோடி மீது யெச்சூரி கடும் தாக்கு!
சென்னை: நாட்டின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு கூட தற்போதைய பிரதமர் மோடி அளவுக்கு வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி கடுமையாகத் தாக்கியுள்ளார்.
விருதுநகரில் நடைபெறும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 2 ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்க வந்த சீதாராம் யெச்சூரி நேற்று சென்னை வருகை தந்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலரான பின்னர் சென்னை வருகை தந்த யெச்சூரிக்கு விமான நிலையத்தில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பெருங்குடியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி பேசியதாவது:
இந்தியாவெங்கும் ஜாதி, மதவெறிகளால் மக்கள் அவதியுறுகின்றனர். இது நமது ஜனநாயக கட்டமைப்பை அச்சுறுத்தி வருகிறது.
சமூகக் குற்றங்கள் மக்கள் மீது ஏவப்படுகிறது. தங்களது வாழ்க்கையை தேர்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது. இன்றைய நவீன காலத்தில் கௌரவக் கொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த சூழலில் நாட்டின் பிரதமர் வெளிநாடுகளில் உள்ளார். ஒரு ஆண்டில் 18 நாடுகளுக்கு சென்றுள்ளார். ஜவஹர்லால் நேரு கூட இந்த அளவிற்கு வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை. அவர் நாடு திரும்பியதும் மக்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் எனக்கேட்க உள்ளோம்.
தற்போது நாட்டிற்கு ஒரு பெரிய மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே கொண்டுவர முடியும்.
இவ்வாறு யெச்சூரி பேசினார்.