கச்சநத்தம்.. 3 பேர் படுகொலை சம்பவம்.. 4 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
கச்சநத்தம் படுகொலையில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சிவகங்கை: கச்சநத்தத்தில் 3 பேர் ஆதிக்க ஜாதியினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் ஆதிக்க ஜாதியினர் மற்றொரு சமூகத்தினர் மீது நடத்திய தாக்குதலில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.

கச்சநத்தம் ஊர்மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டமும் 4 நாட்கள் நடத்தினர். பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்த படுகொலை குறித்து தங்களது கண்டன அறிக்கைகளை பதிவு செய்தனர். மேலும் உயிரிழந்தோரின் குடும்பங்களை நேரில் சந்தித்தும் ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் படுகொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இயக்குனர்கள் பாரதிராஜா, ராம், அமீர், வெற்றிமாறன் மற்றும் ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, படுகொலை செய்யப்பட்ட மூன்று பேரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ஜாதி வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றும், கச்சநத்தம் படுகொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இப்படுகொலைகள் தொடர்பாக 4 பேர் மீது குண்டர்சட்டம் பாய்ந்துள்ளது. சுமன், அருண், சந்திரகுமார், அக்னிராஜா ஆகியோர் மீது இந்த குண்டம் சட்டம் பாய்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications