சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 10 அறைகள் தரைமட்டம்- தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்பு
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 அறைகள் இடிந்து தரைமட்டமானது. பணியில் ஈடுபட்டிருந்த 150 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சிவகாசியை அடுத்த நாரணபுரம் அருகே உள்ள வி. சொக்கலிங்கபுரத்தில் தனியாருக்கு சொந்தமான ஜோனல் பட்டாசு ஆலையில் இன்று 150 க்கும் மேற்பட்டோர் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது ஆலையின் ஒரு பேன்சி ரக பட்டாசுகளை வெடிக்க வைத்து சோதனை மேற்கொண்டதாக தெரிகிறது. அதில் இருந்து வெளியான நெருப்பு பட்டாசுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்குள் விழுந்தது. இதில் அனைத்து பட்டாசுகளும் வெடித்துச் சிதறின. அக்கம் பக்கத்தில் உள்ள அறைகளுக்கும் நெருப்பு பரவியதால் பட்டாசுகள் வெடித்து சுவர்கள் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
வெடி விபத்து பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிவகாசி, ஸ்ரீ வில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வெடி விபத்து நடந்த சொக்கலிங்கபுரத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறி வருவதால் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகியுள்ளன. இதில் தொழிற்சாலையின் உள்ளே சிக்கி இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒருவர் மட்டும் காயமடைந்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு சிவகாசி அருகே முதலிப்பட்டி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். முதலிப்பட்டி பட்டாசு ஆலை விபத்திற்கு பின் பெரியளவில் எந்த விபத்தும் நடக்கவில்லை. இதற்கு தொழிலாளர்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வே காரணம் என்று கூறப்பட்டது.