செருப்பை தைக்க சில்லரை இன்றி தவித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.. கோவையில்
கோவை வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது பிய்ந்த செருப்பை சாலையோர கடையில் தைத்து அணிந்து கொண்டார்.
கோவை: ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை வந்திருந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சாலையோர செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் செருப்பு தைத்து போட்டுக்கொண்டார். அப்போது கூலியாக கொடுக்க சில்லரை இல்லாமல் திண்டாடினார்.
டெல்லியிலிருந்து, கோவைக்கு, 12:30 மணிக்கு, விமானம் மூலம் வந்த ஸ்மிருதி இரானி, 2:30 மணிக்கு, ஈஷா யோகா மையத்தில், நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
அவர் போகும் வழியில்தான் தனது செருப்பு அறுந்து போயிருந்ததை கவனிதார். எனவே, பேரூர் பகுதியில், சாலையோர செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரை அணுகினார் இரானி.
தனது செருப்பை தைத்துக்கொடுக்குமாறு இரானி கேட்டுக்கொண்டார். தொழிலாளியும் செருப்பை தைத்துக்கொடுத்தார். ஆனால் அவருக்கு கொடுக்க ரூ.100 நோட்டுதான் இரானியிடம் இருந்தது. ஆனால் தொழிலாளியிடம் திருப்பித் தர சில்லரை இல்லை. எனவே, இரண்டு தையலாக போட்டுத்தருகிறேன் என கூறி, செருப்புக்கு ஸ்ட்டிராங்காக தையல் போட்டார் அந்த தொழிலாளி. இதன்பிறகு 100 நோட்டை கொடுத்துவிட்டு கிளம்பினார் இரானி.
இந்த சம்பவத்தின்போது, கோவை பாஜக பிரமுகர், வானதி சீனிவாசன் உடனிருந்தார். பாஜக தொண்டர்கள் இந்த காட்சியை செல்போனில் கிளிக்கினர். மத்திய அமைச்சர் எளிமையாக செயல்பட்டதாக அவர்கள் பாராட்டினர். சிலரோ அமைச்சர் விளம்பரத்திற்காக இவ்வாறு செய்திருப்பார் எனவும் விமர்சனம் செய்தனர். இருப்பினும் இரானியையும் சில்லரை தட்டுப்பாடு பிரச்சினை எட்டியுள்ளது என்பது உண்மைதான்.