"தற்கொலை"க்கு சமம்... ஓட்டுப் போடாதீங்க... கிராமங்களில் பகீர் பிரச்சாரம் செய்யும் அமைப்புகள்!
தர்மபுரி: தமிழக சட்டசபைத் தேர்தலில் யாரும் வாக்களிக்க வேண்டாம் என தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களி சில அமைப்புகள் அதிரடியாக பிரச்சாரம் செய்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த தேர்தல்களில் இருந்து வேறுபட்டு, இம்முறை எப்படியும் 100 சதவீத வாக்குப்பதிவை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது தேர்தல் ஆணையம்.
ஆனால், தேர்தல் ஆணையத்திற்கு எதிராக யாரும் வாக்களிக்கப் போக வேண்டாம் என தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
முக்கிய பிரச்சினைகளுக்கு தேர்தலால் தீர்வு காண முடியும் என்பது கானல் நீர் போன்றது. தேர்தல் தற்கொலைக்கு சமமானது என இவர்கள் போஸ்டர் அடித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
இது போன்ற தேர்தல் ஆணையத்திற்கு எதிரான நடவடிக்கைகள் பெரும்பாலும் விளம்பரத்திற்காகவே செய்யப்படுகின்றன என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து. ஆனால், வேட்பாளர்களைப் பிடிக்கவில்லை எனில் நோட்டாவிற்கு வாக்களியுங்கள் என தேர்தல் ஆணையமே மக்களிடம் கூறி வரும் நிலையில், தேர்தலையே புறக்கணியுங்கள் என்ற இந்த பிரச்சாரம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டியது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘இந்த தேர்தல் முறை மக்களை ஏமாற்றும், ஒடுக்கும் செயல் . தேர்தல்கள் தற்கொலை போன்றது. விவசாயிகளுக்கு உண்மையான அதிகாரம் பெறுவதற்காகவும், விவசாயிகள் மற்றும் மக்களின் பிரச்னைகளுக்காக போராடி வருகிறோம்' என்கின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் இது கட்சிகளுக்கு எதிரான போராட்டம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டாலும், தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமின்றி, எதிர்காலத்தில் மாநில அரசுக்கும் இது பெரும் சவால் என்பதை மறுக்க முடியாது.