தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்: நம்பிக்கையில் திருமா
சென்னை: தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தேமுதிகவும், மக்கள் நலக் கூட்டணியும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வோம்.
கூட்டணியில் சேர தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் பதில் சொல்வதாகக் கூறியுள்ளார். தேமுதிக தலைமையுடன் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியும், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
புதிய கட்சிகள் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களோடு பேசினால், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்தும், தேமுதிகவோடு பேசினால் அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்தும் பிரித்துகொடுப்போம். இதுதொடர்பாக ஏற்கெனவே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் நலக்கூட்டணி அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக விமர்சனங்கள் வருகின்றன. நாங்கள் அதிமுகவையும் அதன் தலைமையையும் எதிர்த்து தான் பேசு வருகிறோம். அதிமுக.க்கு சாதகமாக செயல்பட்டால் விஜயகாந்த் எப்படி எங்கள் அணியில் சேருவார். இதில் இருந்தே அது பொய்யான குற்றச்சாட்டுகள் என தெளிவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.