தேர்தல் வந்தாச்சு.... ஹோமங்கள்.... யாகங்கள்... களைகட்டும் அரசியல் களம்
சென்னை; தேர்தல் வந்தாலும் சரி தேர்தலில் ஜெயித்த பின்பும் சரி ஊழலில் சிக்கிக் கொண்டாலும் சரி,வழக்குகள் வந்தாலும் என எந்த ரூபத்திலும் சோதனைகள் வரும்பொழுதெல்லாம் அரசியல் வாதிகள் ஆன்மீகத் தலங்களைத் தேடி செல்லாமல் இருப்பதில்லை காரணம் கடவுள் நம்பிக்கை.
கிரகங்களின் நிலைகள் மாறும் போது அதற்குத் தகுந்தார்ப் போல் யாகங்களையும்,சிறப்பு பூஜை களையும் செய்வதில் தலைவர்கள் முதல் சாதாரண வட்ட செயலாளர்கள் வரை சிறப்புத்தலங்களை நோக்கியே படையெடுத்து வருகின்றனர்.
ரெட்டி சகோதரர்களுக்காக குற்றாலத்திலுள்ள மவுன சாமிகள் மடமென்று அழைக்கப்படும் சித்தேஸ்வரி கோவிலில் சிறப்பு யாகங்கள் நடைப்பெற்றன.
அதேபோல் தற்போது 16 வது மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா முழுவதும் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.இந்த சூட்டோடு சூடாக ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள்,யாகங்கள்,போன்றவைகள் தொடர்ந்து நடக்கத்தொடங்கி விட்டன.
பிரார்த்தனைகள், யாகங்கள்
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, நாட்டின் அடுத்த பிரதமராக, ஜெயலலிதா பதவி ஏற்க வேண்டும்' என, அந்தக் கட்சியினர் பலரும், மாரியம்மனுக்கு வேப்பலை கட்டி கோவிலை சுற்றி வருவது, மண் சோறு சாப்பிடுவது என, பலவிதமான பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
சுதர்சன யாகம்
அந்த வகையில், ஜெயலலிதா பிரதமராக வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள காட்டு அழகர் கோவிலில், சுதர்சன யாகத்தை, சென்னையைச் சேர்ந்த திவாகர் என்பவர் தலைமையில், அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆறு பேர் நடத்தினர்.
மாசி மகத்தில் ஜெயம்
கடந்த மாசி மகம் தினத்தன்று அதிமுக சுதர்சன யாகத்தை நடத்தி உள்ளனர். அந்த நாளில், சுதர்சன யாகம் நடத்தினால், என்ன வேண்டுதலோடு யாகம் நடத்தப்படுகிறதோ, அது கட்டாயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதனால், ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்ற வேண்டுதலோடு, யாகம் நடத்தப்பட்டதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி யாகம்
ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று கடந்த மார்ச் 1ம் தேதி காரியாபட்டி சக்தி மாரியம்மன் கோயிலில், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, தலைவர் முத்துலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் பழனி, சிறப்பு யாகம் நடத்தினர்.
காஞ்சிபுரத்தில் சிறப்பு யாகம்
இந்நிலையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் கடந்த சில நாட்களாக பிரமாண்டமான ஸ்ரீ தசமகா வித்யா ஹோமம் நடந்துவருகிறது.பல லட்சரூபாய் செலவில் தினமும் நடக்கும் இந்த ஹோமத்திற்கு தினமும் சுமார் 50 வேதவிற்பன்னர்கள் மந்திரம் ஓதுகிறார்கள்.
யாருக்காக இந்த யாகம்?
உலக நன்மைக்காக இந்த ஹோமம் நடத்தப்படுவதாக கோவிலில் சொல்லப்பட்டாலும்குஜராத் முதல்வரும் பிரதம வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு நெருக்கமாக இருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த முக்கிய புள்ளிகள் மோடி பிரதமராக வர வேண்டும் என்பதற்காக ராஜ்ய அதிகாரம் வேண்டித்தான் இந்த யாகம் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திராகாந்திக்கு யாகம்
இதற்கு முன்பு மறைந்த இந்திரா காந்தி உட்பட மூன்று பேருக்கு இதேபோல தசமகா வித்யா ஹோமம் நடத்தப்பட்டு அவர்களும் அந்த காலகட்டத்தில் நடந்த பொதுத் தேர்தல்களில் வெற்றிபெற்று பிரதமர் ஆகியிருக்கிறார்கள் என்றும் சொல்ல்கிறார்கள்.
ஜெ.பிரதமராக யாகம்
நரேந்திர மோடிக்காக இந்த யாகம் என்று ஒருபுறம் தகவல்கள் வெளிவந்தாலும், தமிழக முதல்வருக்காக இந்த ஹோம பூஜைகள் என்றும் இங்கு எப்போதும் வராத காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் எம்எல்ஏவான வாலாஜாபாத் கணேசனும் வந்து சிறப்பு யாகங்களை பார்த்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆண்டவனிடம் அப்ளிகேசன்
வேட்பாளர்களை சந்தித்து வாக்கு கேட்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஆண்டவனிடம் அப்ளிகேசன் போட இதுபோன்ற யாகத்தை செய்து கட்சித் தலைமையின் குட்புக்கில் இடம்பெற முயற்சி செய்து வருகின்றனர் அரசியல்வாதிகள்.