8 தமிழக மீனவர்களைக் கைது செய்தது இலங்கை.. தலைமன்னார் கொண்டு செல்லப்பட்டனர்!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன் பிடித்ததாக கூறி 8 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து தலைமன்னாருக்குக் கொண்டு சென்றுள்ளது.
மீனவர்களுடன் அவர்களது படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை மீனவளத்துறை உதவி இயக்குநர் பி. ரவீந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார். ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் எமரிட்டும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
டிசம்பர் 9ம் தேதி இதேபோல கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு இலங்கைக் கடற்படையினர் விரட்டியித்திருந்தனர். இதில் 20க்கும் மேற்பட்ட மீன்பிடி வலைகள் சேதமடைந்தன. இந்த நிலையில் 8 பேரைக் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்புதான் கிறிஸ்துமஸையொட்டி இரு நாடுகளும் சில மீனவர்களை விடுவிப்பதாக அறிவித்து விடுவித்திருந்தன. இந்த நிலையில் எட்டு மீனவர்களை பிடித்துள்ளது இலங்கை.