ஸ்ரீரங்கத்தில் 1,25,000 லட்சியம், 1,00,000 நிச்சயம்: அதிமுகவின் கணக்கு பலிக்குமா?
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு 58 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என்ற லயோலா கல்லூரியின் கருத்துக்கணிப்பால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். இதன் மூலம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று விடலாம் என்றும் நம்பிக்கையோடு கூறி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தல் அதிமுகவிற்காக ஆசிட் டெஸ்ட். ஏனெனில் இதனை 2016ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என்றும் எதிர்கட்சியினர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
ஆனாலும் இதற்கெல்லாம் அசந்தவங்களாக நாங்க... எவ்வளவோ பார்த்துட்டோம்... இதை பார்க்கமாட்டோமா? என்று கெத்தோடு பிரச்சாரம் செய்தனர்.
பிரச்சார யுக்தி
‘சாம பேத தாண தண்ட' என நான்கு வழிகளையும் பிரச்சாரத்தில் பயன்படுத்தியுள்ளது அதிமுக. பிரச்சாரத்தின் இறுதி நாளான புதன்கிழமையன்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே சென்டிமெண்டாக பிரச்சாரத்தை நிறைவு செய்தார் நத்தம் விஸ்வநாதன்.
பகவத் கீதை வாசகம்
"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்" என்று பகவத் கீதை வாசகத்தைச் சொன்ன நத்தம் விஸ்வநாதன், ஒன்னேகால் லட்சம் நமது லட்சியம், ஒரு லட்சம் நிச்சயம் என்று கூறி முடித்தார்.
கடைசி நேர சுறுசுறுப்பு
அம்மாவை விட அதிகமாக ஓட்டு வாங்கிட்டா என்னா செய்றது என்று அதிமுகவினர் யோசிப்பதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் நானே போட்டியிடுவதாக நினைத்து வாக்களியுங்கள் என்று ஜெயலலிதா கடிதம் எழுதவே, கடைசி நேரத்தில் அதிமுகவினர் சுறுசுறுப்பு காட்டியதாக கூறப்படுகிறது.
பதில் சொல்லுங்க தாத்தா
பிரச்சாரத்தின் இறுதிநாளன்று விந்தியா பேசியதுதான் ஹைலைட். கருணாநிதி தாத்தா பதில் சொல்லுங்க என்று ஆரம்பித்தவர், நான் கேட்டா பதிலே சொல்ல மாட்டேங்கிறாரு. 1963 ல இருந்து பேசலாமா தாத்தா. அப்ப இருந்து இப்ப வரைக்கும் பாவம் அந்த தாத்தா இன்னைக்கு வரைக்கும் குடும்பத்திற்காக உழைக்கிறார். ஆனா அம்மா மக்களுக்காக உழைக்கிறாங்க என்றார்.
கடைசி நாள் கலகலப்பு
என்னதான் பிரச்சாரத்தில் அனல் பறந்தாலும் கடைசி நாளில் சில உற்சாக காட்சிகளும் அரங்கேறின. திமுகவினரும் பாஜகவினரும் பிரச்சாரத்தில் எதிரெதிரே சந்தித்த போது ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டனர். பாஜக வேட்பாளர் சுப்ரமணியன், திமுக முன்னாள் அமைச்சர் நேருவுக்கு பொன்னாடை போர்த்தினார்.
இது என்ன கலாட்டா
சார் ரொம்ப ஸ்டிரிக்ட்டு... ஸ்டிரிக்ட்டு... என்று தமிழக தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவை சொன்னாலும்... ஸ்ரீரங்கத்தில் பணமும், பொருட்களும் வாக்காளர்களுக்கு பஞ்சமில்லாமல் கிடைத்தது. பகிரங்கமாகவே ஜரிகை சேலைகளை கொடுத்த திமுகவினரை அதிமுகவினர் மடக்கிப் பிடித்த சம்பவமும் அரங்கேறியது. அதற்கு கத்திக்குத்தும் வாங்கிக்கொண்டனர் அதிமுகவினர். ஒருவழியாக பெரிய ரகளைகள் எதுவும் இன்றி சின்ன ரத்தக்காயத்தோடு நிறைவடைந்தது பிரச்சாரம்.
ஹைடெக் வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்புக்கு துணைராணுவப்படை, ஏராளமான போலீசார் என குவிக்கப்பட்டுள்ளனர். வெப் கேமிரா, வீடியோ பதிவு, டேப்லெட் என ஹைடெக் ஆக வாக்குப்பத்திவு நடைபெற்று வருகிறது.
லட்சியம் நிறைவேறுமா?
எதிர்கட்சியினரை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும். லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும் என்ற அதிமுகவின் லட்சியம் நிறைவேறுமா? அந்த ரங்கநாதருக்கே வெளிச்சம்.