மும்முனைப் போட்டிக்குத் தயாராகும் ஸ்ரீரங்கம்.... ?
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டசபைத் தேர்தல் களம் சூடாக ஆரம்பித்துள்ளது. முதல் கட்சியாக திமுக தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. வழக்கமாக அதிமுகதான் முந்திக் கொண்டு வேட்பாளரை அறிவித்து வேலையையும் தொடங்கும். அந்த வகையில், ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தற்போது அதிமுகவுக்கு சறுக்கலாக அமைந்துள்ளது திமுகவின் வேட்பாளர் அறிவிப்பு.
பிப்ரவரி 13ம் தேதி நடைபெறவுள்ள ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் மும்முனைப் போட்டிக்கு வாய்ப்புள்ளது. எப்படி என்று கேட்கலாம்.. கடைசி நேரத்தில் காங்கிரஸின் ஆதரவை திமுக பெறலாம் என்ற எதிர்பார்ப்பு தற்போது வலுத்து வருகிறது.
எனவே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் திமுகவும், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாஜகவும் போட்டியிடலாம். அதிமுக வழக்கம் போல தனித்துப் போட்டியிடும்.
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்த தொகுதியில் பெண் வேட்பாளரை நிறுத்தவும், அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவும், கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
திமுகவைப் பொறுத்தவரை தான் அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு உருவாக்கவுள்ள புதிய கூட்டணிக்கான ஒத்திகையாக இந்த தேர்தல் களத்தை பயன்படுத்த முனையலாம் என்று தெரிகிறது.
திமுகவை விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேயம் மக்கள் கட்சி ஆகியவை ஆதரிக்கின்றன. காங்கிரஸின் ஆதரவையும் திமுக நாடலாம் என்று தெரிகிறது. எனவே இந்த இடைத் தேர்தலில் புதிய அணிக்கான முயற்சியை திமுக மேற்கொள்ளக் கூடும் என்றே தெரிகிறது.
மறுபக்கம் அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதோடு, தனது பலத்தையும் நிரூபித்து அடுத்த சட்டசபைத் தேர்தலில் தன்னை ஒரு பலம் வாய்ந்த கட்சியாக காட்டிக் கொள்ள பாஜக முயலலாம்.
இவர்களுக்கு நடுவில் அதிமுக கோல் போட்டாக வேண்டும். ஆனால் அக்கட்சியோ அமைதியாக இருக்கிறது. வேட்பாளரைக் கூட இன்னும் அறிவிக்கவில்லை. பிரசாரத்திற்கு ஜெயலலிதா வருவாரா என்பதும் சந்தேகமாகவே உள்ளது.
மொத்தத்தில் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் களம் அதிமுகவுக்கு மட்டுமல்லாமல், திமுக, பாஜக போன்ற கட்சிகளுக்கும் கூட அக்னிப் பரீட்சையாகவே அமையும் என்று எதிர்பார்க்கலாம்.