வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வைகுண்ட ஏகாதசி யை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் ரங்கா முழக்கத்துடன் நம்பெருமாளை தரிசித்தனர்.
திருச்சி : 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் பெருமைக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 28ஆம்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
பகல்பத்து நிகழ்ச்சி கடந்த 29ஆம்தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலையில் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் பத்து நிறைவு நாளில், மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தார்.
சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு எனும் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் இன்று அதிகாலை 4.30மணிக்கு நடைபெற்றது. ரங்கா.. கோவிந்தா என்ற கோஷம் முழங்க சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசலை கடந்து அருள்பாலித்தார்.
ரங்கா முழக்கத்துடன் தரிசனம்
நம்பெருமாள் எழுந்தருளியதை காண காத்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ரங்கா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். பக்தர்களும் பரமபத வாசல் வழியாக சென்று ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு வசதி
சொர்க்கவாசல் இன்று இரவு 10 மணி வரை திறந்து இருக்கும். மேலும் வருகிற 13ஆம்தேதி வரை பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்து இருக்கும். 14ஆம்தேதி மாலை 3.15 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்து இருக்கும். 15ஆம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. 16ஆம்தேதி பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரையும், 17ஆம்தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும் சொர்க்க வாசல் திறந்து இருக்கும். மேற்கண்ட நாட்களில் பக்தர்கள் சொர்க்கவாசலை கடந்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
சென்னை திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோயிலிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் திறக்கப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர்.
மாதவ பெருமாள்
சென்னை மயிலாப்பூரில் உள்ள மாதவ பெருமாள், கேசவ பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.