போதை பொருள் வியாபாரிகளிடம் லஞ்சம்- அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் மீது நீதி விசாரணை கோரும் ஸ்டாலின்
வேலியே பயிரை மேய்வது போல போதை பொருள் வியாபாரிகளிடம் அமைச்சர், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளனர், நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: போதைப் பொருட்கள் வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றவர்கள் பற்றி விசாரிக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். லஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவு மறைந்த முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருக்கும்போதே வெளியிடப்படப்பட்டது. அப்போது பெயரளவுக்கு மட்டும் கடைப்பிடிக்கப்பட்ட உத்தரவு பின்னர் குப்பையில் வீசப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள், மாநில அமைச்சர் ஒருவர், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோருக்கு பணம் செலுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. போதைப் பொருட்கள் விற்க 40 கோடி ரூபாய் வரை போலீஸ் லஞ்சம் வாங்கியுள்ளது சமூக ஆர்வலர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.
லஞ்சம் பெற்றது தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
குட்கா ஊழல்
இன்று ஆங்கில பத்திரிகையில் முதல் பக்கத்தில் வெளிவந்துள்ள குட்கா ஊழல் பற்றிய விவரங்கள் அதிர்ச்சியளிக்கிறது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்சம் குறித்தும் வெளிவந்துள்ள ஆதாரங்கள் அனைவரையும் திடுக்கிட வைக்கிறது.
விசாரணை கமிஷன்
அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறை அதிகாரிகள் மட்டத்திலும் புரையோடிப் போயிருக்கும் இந்த ஊழல் விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று அன்று முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்துக்கு கோரிக்கை வைத்தேன். ஊழலுக்கு முகமூடி போட்டு மறைக்க நினைத்து அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்.
லஞ்சம் வாங்கிய அதிகாரிகள்
பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பதுக்கி வைக்கும் குடோன்களை நடத்தியவர்களிடம் மாதந்தோறும் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கும் சென்னை மாநகர காவல்துறை கை கட்டி நின்று ஊழியம் செய்துள்ளார்கள் என்பது வேதனைமிக்க செயலாக அமைந்திருக்கிறது.
யார் யாருக்கு மாமுல்
வருமான வரித்துறை அதிகாரிகளின் தீவிர விசாரணையில் இன்ஸ்பெக்டர் முதல் கமிஷனர் வரை யார் யாருக்கு எல்லாம் மாமூல் கொடுக்கப்பட்டது போன்ற தகவல்கள், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் பொருள்களை குடோன்களில் பதுக்கி வைத்து சென்னை மாநகரத்திற்கே சப்ளை செய்தவர்கள் யார் யார் என்ற விவரங்கள், அதுபற்றிய வீடியோ ஆதாரங்கள் எல்லாம் வருமான வரித்துறையிடம் சிக்கியது பற்றி கடந்த டிசம்பர் மாதமே செய்திகள் வெளிவந்தன.
மாமுல் வாங்கிய அதிகாரிகள்
அது மட்டுமின்றி அரசியல் சட்டப்பதவி வகித்த ஒருவரின் உறவினரும், மாநிலத்தின் உயர் பொறுப்பு வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகனும் இதில் ஈடுபட்டிருந்த தகவலும் வெளியானது. இந்த பின்னணியில் தான் இன்று வெளிவந்துள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டவாறு, உயர் போலீஸ் அதிகாரிகள், குறிப்பாக கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் பெற்ற மாமூல் விவரங்களை வருமான வரித்துறை தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதமாக அனுப்பி வைத்தது என்றும் அது குறித்து விசாரணை நடக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
வெட்கக்கேடு
"வேலியே பயிரை மேய்வது போல்" காவல்துறையில் கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகளை கண்காணிக்க வேண்டிய போலீஸ் கமிஷனர் அதிமுக ஆட்சியில், "மாமூல் கலாச்சாரத்தில்" திளைத்து மக்களின் ஆரோக்கியத்திற்கு எதிராக நடைபெற்ற இந்த கொடூரமான குற்றச்செயல்களை கண்டும் காணாமல் இருந்ததை, அ.தி.மு.க. அரசு சகித்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடானது.
ஊழலுக்காக சீரழியும் மக்கள் நலன்
இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் போதைப் பொருட்கள் விற்பனைக்கு உதவி செய்து வருங்கால தலைமுறையை போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்க முயற்சி செய்ததை, வேடிக்கை பார்த்துக்கொண்டு ஊழலுக்காக மக்களின் நலனை சீரழிக்க இந்த அரசு கூச்சப்படாது என்பது வெட்ட வெளிச்சத்திற்கு வந்து விட்டது
விசாரணை கமிஷன்
ஆகவே, நான் ஏற்கெனவே கோரிக்கை விடுத்தது போல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உடனடியாக ஒரு விசாரணை கமிஷன் அமைத்து "குட்கா மாமூல் விவகாரத்தில்" சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் அதில் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.
சஸ்பெண்ட் செய்ய வேண்டும்
அதற்கு முன்னோட்டமாக சம்பந்தப்பட்ட போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து நீதி விசாரணைக்கு நேர்மையான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.