அதிமுக எம்.பி.க்கள் காவிரி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் - ஸ்டாலின் பேட்டி
சென்னை: காவிரி விவகாரத்தை அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். இனியாவது காவிரி பிரச்சனை தொடர்பாக மத்திய அரசை அணுகி உரிய தீர்வு காணவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவிற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் இன்று அடைக்கப்பட்டன.

பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்களும் பல்வேறு இடங்களில் நடைபெற்றன. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களுடன் ரயில் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுப்பேட்டை சமூகநலக்கூடத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். காவல் துறை மாலை 6 மணிக்கு மேல் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் திமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். காவிரி நதிநீர் பிரச்சனையை அதிமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமரை சந்தித்து அவர்கள் அழுத்தம் தரவேண்டும் என கூறினார். மேலும், இனியும் மத்திய, மாநில அரசுகள் காவிரி விவகாரம் தொடர்பாக செயல்படாவிட்டால் தொடர்ந்து போராடுவோம் என்றார் ஸ்டாலின்.
அதேபோல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட திமுக மகளிரணி தலைவர் கனிமொழி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications