என்னால்தான் அரசியல்வாதிகள் மக்களைத் தேடிச் செல்கிறார்கள்.. இது ஸ்டாலின் பேச்சு
சேலம்: அரசியல்வாதிகள் மக்களை தேடி செல்லும் காலம் என்னால் உருவாகியுள்ளதாக சேலத்தில் திமுக பொருளாளர் மு.க,ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே' விடியல் மீட்பு 3-ம் கட்ட பயணத்தை சேலத்தில் இன்று காலை தொடங்கினார்.
அப்போது சேலம் மாவட்ட ம.தி.மு.க. அவை தலைவராக இருந்த ஜெயவேல், துணை செயலாளர் ராஜேந்திரன் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
தாய் கழகம்:
இந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேசியபோது, ‘'ம.தி.மு.க.வில் இருந்து விலகி தாய் கழகத்திற்கு வந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். உங்களுக்கு தி.மு.க.வில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். நீங்கள் வந்து சேரக்கூடிய தாய் கழகத்திற்கு தான் வந்துள்ளதால் கவலை வேண்டாம். உங்களை தி.மு.க.வில் அனைத்து பொறுப்புகளை வகிக்கும் அனைவரும் அரவணைத்து வரவேற்க தயாராக உள்ளோம்.
அண்ணா தோற்றுவித்த இயக்கம்:
தி.மு.க. புதிதாக தோன்றிய இயக்கம் இல்லை. இதற்கு நீண்ட, நெடிய வரலாறு உண்டு. தேர்தல் களத்திற்கு வரவேண்டும், போட்டியிட வேண்டும், பொறுப்புகளை வகித்து உட்கார்ந்து அனுபவிக்க வேண்டும் என்பதல்ல நம் இயக்கம். 1949 ஆம் ஆண்டு அண்ணா இந்த இயக்கத்தை தோற்றிவித்தார். .
திமுக போட்டி:
இதையடுத்து சமுதாய பணி, அரசியல், பொதுப் பணி, மக்கள் பணி என்ற உணர்வுகளுடன் பணி ஆற்றினோம். 1957 ஆம் ஆண்டு தான் சட்டமன்ற தேர்தலில் இறங்கினோம். ஆனால், இன்று கட்சி தொடங்கிய உடனே சிலர் ஆட்சிக்கு வர நினைக்கின்றனர். அதிலும் சிலர் ஆட்சிக்கு வருவதற்காகவே கட்சியை தொடங்குகின்றனர். இவர்கள் அரசியல் அனாதையாக, அகதிகளாக இருக்கும் சூழ்நிலைகளை நாம் பார்க்கிறோம்.
போட்டியிடலாமா... வேண்டாமா
1956 ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்கள், பொது மக்களிடம் தி.மு.க. தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்று கேட்கப்பட்டது. அப்போது 95 சதவீதம் பேர் தேர்தலில் போட்டியிடலாம் என்று வாக்களித்தனர்.
அண்ணா மறைவு:
இதையடுத்து 1957 ஆம் ஆண்டு முதன் முதலாக 5 பேர் எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பை பெற்று சட்டமன்ற கூட்டத்திற்குள் நுழைந்தோம். 1967 ல் 50 எம்.எல்.ஏ.வாக மாறி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி ஆனோம். 1967 ல் அகில இந்திய காங்கிரசை தோற்கடித்து தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அப்போது அண்ணா முதல்வராக ஓராண்டு பதவியில் இருந்தார். ஆனால் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்த பின்னர் கலைஞர் முதல்வராக பொறுப்பு ஏற்றார்.
நெருக்கடி நிலை:
1971-ல் அதிக இடங்களில் வெற்றி பெற்று கலைஞர் ஆட்சிக்கு வந்தார். இந்த நிலையில் 1975-ல் இந்தியாவில் நெருக்கடி நிலை உருவானது. பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக எழுதக்கூடாது, பொதுக் கூட்டத்தில் அரசியல் பேசக் கூடாது என்ற கட்டுப்பாடு வந்தது. அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி தம்மை காத்துக் கொள்ள நெருக்கடி நிலையை ஏற்படுத்தினார். நெருக்கடி நிலையை எதிர்த்து போராடிய வாஜ்பாய், அத்வானி, சுதந்திரத்துக்காக போராடிய ஜெயபிரகாஷ் நாராயணன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
ஆட்சி கவிழும்:
மேலும் இந்திராகாந்தி தமிழகத்துக்கு 2 தூதுவர்களை அனுப்பி வைத்தார். தூதுவர்கள் கோபாலபுரத்தில் கலைஞரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அந்த கடிதத்தில் நெருக்கடி நிலையை ஆதரிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் உங்கள் ஆட்சி கவிழும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை படித்து பார்த்த கலைஞர், அவர்களிடம் நான் பெரியார், அண்ணாவால் வளர்க்கப்பட்டவன். ஆகையால் இதற்கு பயப்படமாட்டேன். என் உயிரே போனாலும் இதை ஆதரிக்க மாட்டேன். அடுத்த நாளே லட்சக்கணக்கான மக்களுடன் கலைஞர் மெரினா கடற்கரையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றினார். மேலும் போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்டவர்கள் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதில் சிலர் உயிரிழந்தனர்.
மீண்டும் திமுக ஆட்சி:
இதையடுத்து 13 ஆண்டு காலம் நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. பின்னர் 1989-ல் ஆட்சியை கைப்பற்றினோம். 1991-ல் தோற்றோம். 1996-ல் மீண்டும் வந்தோம், 2001-ல் தோற்றோம். 2006-ல் ஆட்சியை பிடித்தோம். 2011-ல் தோற்றோம்.2016-ல் நாம் தாம் ஆட்சிக்கு வரப் போகிறோம். இதில் மாற்றமிருக்காது. வெற்றி பெற்றால் வீறு கொண்டு எழுவதும், தோல்வி கண்டால் துவண்டு போவதும் நம் இயக்கம் அல்ல.
மக்களைப் பற்றி சிந்திக்கும் திமுக:
வெற்றி அடைந்தாலும், தோல்வி அடைந்தாலும் மக்களைப் பற்றி சிந்திக்கும் ஒரே கட்சி தி.மு.க. தான். வெற்றி - தோல்வி இரண்டையும் ஒன்றாக கருதி மக்கள் பணியில் கவனம் செலுத்துவோம்.
காத்திருப்பு
இன்னும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பலர் தி.மு.க.வில் இணைய காத்திருக்கின்றனர். அவர்களை வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம். உங்களுக்கு எந்த இடையூறுயும், பிரச்சினையும் இருக்காது. நாம் ஒரே கொள்கை, லட்சியத்தோடு செயலாற்றுவோம். இந்த ஆட்சியை அப்புறப்படுத்த பாடுபட வேண்டும்.
நமக்கு நாமே:
இதற்கு தான் ‘நமக்கு நாமே‘ என்ற தலைப்பை கலைஞர் வைத்தார். இந்த தலைப்பை எழுதுவதற்கு அவர் ஒருநாள் தூங்கவில்லை என்று என்னிடம் கூறினார். இந்த தலைப்புக்காக ஏன் தூங்கவில்லை என்று கேட்டதற்கு அவர் என்னிடம், இன்றைக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், மேயர்கள் உள்பட பலரால் யாருக்கும் பயன் இல்லை. ஆகையால் நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு தான் நமக்கு நாமே என்ற தலைப்பை வைத்ததாக கூறினார். 144 சட்டசபை தொகுதிகளை முடித்து பாதி கிணற்றை தாண்டி விட்டேன்.
மீதியையும் தாண்டுவேன்
தற்போது உங்களை பார்க்கும் போது மீதியையும் எளிதாக தாண்ட முடியும். மக்கள் குறைகளை கேட்டு வருவதால் நாங்கள் தான் மக்கள் மத்தியில் ஆளுங்கட்சியாக செயல் படுகிறோம். அரசியல்வாதிகளை தேடி மக்கள் வந்த காலம் போய், மக்களை தேடி அரசியல்வாதிகள் செல்லும் காலம் என்னால் உருவாகி உள்ளது''என்று தெரிவித்தார்.