சட்டசபையை உடனடியாக கூட்ட உத்தரவிடுங்கள்.. கவர்னருக்கு ஸ்டாலின் கடிதம்!
சட்டசபையை உடனடியாக கூட்டுமாறு முதல்வர் மற்றும் பேரவை தலைவருக்கு உத்தரவிடுமாறு ஆளுநருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: சட்டசபையை உடனடியாக கூட்டுமாறு முதல்வர் மற்றும் பேரவை தலைவருக்கு உத்தரவிடுமாறு ஆளுநருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அரசின் பணம் பல்வேறு திட்டங்களுக்கு செலவழிக்கப்படும் விநோதமான சூழ்நிலையை தவிர்க்க சட்டசபை உடடினயாக கூட்டப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரை இறுதி செய்திருப்பது ஜனநாயக விரோத செயல் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார். சட்டசபை கூட்டத்தை மே 11-ம் தேதி ஆளுநர் இறுதி செய்திருப்பது ஜனநாயக விரோத செயல் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் விவாதம் நடத்துவது சங்கடமாக கருதப்படுகிறது என்றும் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழக கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி ஒப்புதல் அளிக்கவும், மானியங்கள் மற்றும் ஒதுக்கீடு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் படைத்த சட்டப் சபையின் ஒப்புதல் இல்லாமல் அரசின் பணம் பல்வேறு திட்டங்களுக்கு செலவழிக்கப்படும் விநோதமான சூழ்நிலையை தவிர்க்கவும் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரை உடனடியாக கூட்ட முதல்வர் மற்றும் பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டுமென்று ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கவர்னருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.