அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் பாதியிலேயே நின்று விடுகிறது ஏன் ? கருணாநிதி
சென்னை: அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்படும் பெரும்பாலான திட்டங்கள் வெறும் அறிவிப்போடு நின்று விடுவது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி:-உளவுத்துறை ஐ.ஜி., டேவிட்சன் தேர்தல் நேரத்தில் திடீரென்று மாற்றப்பட்டிருக்கிறாரே?
பதில்:-உண்மைகளை மறைத்து பேசத்தெரியாதவர் இவர். தேர்தல் நேரத்தில் முக்கியமான உளவுத்துறை பதவியிலே அவர் இருப்பது சரியாக இருக்குமா? ஒரு சில மாதங்களுக்கு முன்பு, உளவுத்துறையின் தலைமைப்பொறுப்பிலே இருந்த அம்ரேஷ் பூஜாரி என்ற ஒரு அதிகாரி, சொத்துக்குவிப்பு வழக்கிலே என்ன தீர்ப்பு வரப்போகிறது என்பதை முன்கூட்டியே சொன்ன காரணத்தினால் மாற்றப்பட்டார் என்று சொல்லப்பட்டது. இப்போது இவர் என்ன சொன்னாரோ? அ.தி.மு.க. ஆட்சியில், உண்மையைச் சொன்னாலே உபத்திரவம் தான்.
கேள்வி: "அம்மா சிமெண்டு" என்ற பெயரில் விமரிசையாகத் தொடங்கப்பட்ட திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டு வந்த சிமெண்டு நிறுத்தப்பட்டு விட்டதாமே?
பதில்: அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்களில் பெரும்பாலானவை அறிவிப்போடு நின்று விடும்! ஒரு சில திட்டங்கள் பெரும் விளம்பரத்தோடு ஆரம்பமாகும். அதன் ஆயுள், ஒரு சில வாரங்கள் அல்லது ஒரு சில மாதங்கள்தான்! அந்த வரிசையில் "அம்மா சிமெண்டு" வினியோகமும் ஆகிவிட்டது போலும்!
கேள்வி:-எண்ணூர் அனல் மின் நிலைய ஒப்பந்த வழக்கு என்ன ஆயிற்று? அதன் விவரம் என்ன?
பதில்:-29-3-2012 அன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா விதி 110-ன் கீழ் சட்டப்பேரவையில் படித்த அறிக்கையில், "660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்த எனது தலைமையிலான அரசு தற்போது முடிவு செய்துள்ளது என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 3,960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும் இந்த அனல் மின் திட்டம், 2015-ம் ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும்" என்று அறிவித்தார்.
2015-ம் ஆண்டும் முடிந்து விட்டது! என்ன ஆயிற்று இந்தத் திட்டம்? ஏன் உற்பத்தியைத் தொடங்க வில்லை? என்பதுதான் அ.தி.மு.க. ஆட்சிக்கே உரிய பெருமை. சென்னை எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 யூனிட்டுகளுடன் கூடிய புதிய அனல் மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதில் திருச்சியில் உள்ள பாய்லர் ஆலை மற்றும் சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆகிய இரண்டும் பங்கேற்றன.
இறுதியாக ரூ.7,788 கோடியில் பாய்லர் ஆலைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துசீன நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஐகோர்ட்டு அந்த மனுவினைத் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சீன நிறுவனம் சென்னை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்து, அந்த அமர்வு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தர விட்டது.
அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மேல் முறையீடு செய்து, அந்த வழக்கில்தான் உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 3 வல்லுனர்களின் பெயர்களை நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டுமென்று தெரிவித்திருக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.