நாளிதழ்களில் இன்று: ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து திரண்ட 50 ஆயிரம் மக்கள்
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தி இந்து (தமிழ்) - தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு
தூத்துக்குடி சிப்காட்டில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வருகிறது. இந்த ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் முழு கடையடைப்புப் போராட்டம் தூத்துக்குடியில் நேற்று (சனிக்கிழமை) நடந்தது.
பெரிய வர்த்தக நிறுவனங்கள் முதல் சிறிய காய்கறி கடைகள் வரை அடைக்கப்பட்டிருந்தன என்கிறது தி இந்து (தமிழ்) நாளிதழ் செய்தி. மேலும், மாலை 6 மணிக்கு தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், மில்லர்புரத்தில் இருந்து, பழைய பேருந்து நிலையம் வரை, 4 கி.மீ. தூரத்துக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முழுமையாக நிறைந்திருந்தனர். பல்வேறு குழுக்களாக கோஷம் எழுப்பியபடி நின்றிருந்தனர். பெருமளவில் பொதுமக்கள் திரண்டதால், மாலை 6 மணிக்குப் பிறகும் இச்சாலையில் கடைகள் திறக்கப்படவில்லை. போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இரவு 8 மணிக்குப் பிறகு படிப்படியாக கூட்டம் குறையத் தொடங்கியது என்று அச்செய்தி விவரிக்கிறது.
தினத்தந்தி - காவிரி மேற்பார்வை ஆணையம்
உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்னும் 4 நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில். மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.
"தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இடையேயான காவிரி நீர் பங்கீட்டை கவனிக்க காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையம், ஒரு சுதந்திரமான உறுப்பினர் தலைமையில் இயங்கும். அவர் காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் கூறியபடி தலைமை என்ஜினீயராக இருக்க வேண்டும் என்பது இல்லை. ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ அல்லது தொழில்நுட்ப வல்லுனரோ இருக்கலாம்.இது 9 பேரை கொண்டதாக இருக்கும். இதில் தலைவர் உள்பட 5 பேர் முழு நேர உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இவர்களை மத்திய அரசு நியமிக்கும். சம்மந்தப்பட்ட 4 மாநிலங்களும் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பார்கள்." என்று ஒரு அதிகாரி கூறியதாக விவரிக்கிறது அந்த செய்தி.
தி இந்து (ஆங்கிலம்) - திமுக மண்டல மாநாடு
சனிக்கிழமை தொடங்கிய திமுக மண்டல மாநாடு குறித்து செய்தி வெளியிட்டுள்ளட்து தி இந்து (ஆங்கில) நாளிதழ். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான முஸ்தீப்பாகவும், திமுகவினரை திரட்டுவது மற்றும் நம்பிக்கை அளிப்பதற்காகவும் இம்மாநாடு நடத்தப்படுவதாக பார்க்கப்படுகிறது என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
தினமணி - 'அரசியலுக்காக கூட்டணியில் இருந்து விலகல்
"அரசியல் காரணங்களுக்காகவே பா.ஜ.க கூட்டணியில் இருந்து தெலுங்க தேசம் கட்சி விலகியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் நலனுக்காக அல்ல" என்று பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினமணி. "அமித் ஷா முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல்களை தனது கடிதத்தில் தெரிவித்து உள்ளார். பா.ஜ.க கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக, நான் தில்லிக்கு 29 முறை சென்று உங்களை சந்தித்து மன்றாடினேன். அந்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில்தான் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டியதாகிவிட்டது" என்று அமித் ஷாவுக்கு பதிலளித்து ஆந்திர சட்டப் பேரவையில் சந்திரபாபு நாயுடு உரையாற்றியதாக கூறுகிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்
- சிரியா: வெளியேறிய கிளர்ச்சியாளர்கள்; முன்னேறும் அரசு படைகள்
- ஒரு மணி நேரம் இருளில் மூழ்கிய உலகின் முக்கிய நகரங்கள் #EarthHour
- “டாஸ்மாக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கல்விக்கு இல்லை”
- மக்களை நெகிழ்த்திய போலீஸின் உயிர் தியாகம்