புத்தகம், சீருடை சேல்ஸ்... இது என்ன ஸ்கூலா? இல்லை கடையா? பள்ளிகளிடம் காட்டமாக கேட்ட சிபிஎஸ்இ!
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் புத்தகம், சீருடை விற்பனையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: பள்ளி வளாகங்களில் இனி புத்தகம் மற்றும் சீருடையை விற்பனை செய்யக் கூடாது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் சி.பி.எஸ்.இ பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளி வளாகங்களிலேயே நிர்வாகம் தரப்பிலோ அல்லது தனி நிறுவனங்கள் சார்பிலோ சீருடை மற்றும் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தக் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க நிர்பந்திக்கப்படுவதாக பெற்றோர் சார்பில் சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு பல புகார்கள் அனுப்பப்பட்டன. இதனையடுத்து பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் அனுப்பியுள்ள கடிதத்தில் பள்ளி வளாகத்திலேயே புத்தகங்கள், நோட்டு, பென்சில், ஷு உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.
இது போன்ற நடவடிக்கைகளில் இனி ஈடுபடக்கூடாது என்றும், இதுவே இறுதி எச்சரிக்கையாக இருக்கும் என்றும் இந்த உத்தரவை மீறும் பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் கடுமையாக கூறியுள்ளது.
தரமான கல்வியை வழங்குவது மட்டுமே பள்ளிகளின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், நீங்கள் நடத்துவது பள்ளிகள்... வியாபார நிறுவனங்கள் அல்ல என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் கடிதத்தில் வறுத்தெடுத்துள்ளது.