ஹரீஸ் மரணத்திற்குக் கதை கட்ட வேண்டாம்... வாட்ஸ் அப்பில் வலம் வரும் வேண்டுகோள் - டிஜிபி விளக்கம்
சென்னை : சென்னையில் மர்மமான முறையில் உயிரிழந்த ஐபிஎஸ் அதிகாரி ஹரிஷ், முன்னாள் டிஜிபி ராமனுஜத்தால் புறக்கணிக்கப்பட்டதாக தகவல் ஒன்று வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி அசோக்குமார், ஹரிஷ் மரணம் தொடர்பாக விவகாரத்தை தேவையில்லாமல் திசை திருப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். ஹரிஷ் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மை நிலை தெரிய வரும் என்றும் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான விடுதியில், ஹரிஷ் சடலமாகக் கிடந்துள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான ஹரிஷ், 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் அணியைச் சோ்ந்தவர். அண்மையில்தான் மதுரையிலிருந்து சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, தமிழக காவல்துறையின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் ஏஎஸ்பி-யாக பணியாற்றி வந்தார்.
ஹரிஷ் மரணம் குறித்து சென்னை போலீஸ் தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எழும்பூர் ஐ.பி.எஸ். அதிகாரிகள் விடுதியில் அறை எண் 104-ல் ஹரிஷ் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை, அவரது அறை நீண்ட நேரம் திறக்காததை அடுத்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது தகவலறிந்து வந்த போலீஸ், அறைக்கதவை உடைத்து ஹரிஷ் உடலை மீட்டனர்
இதனிடையே ஹரீஸ் மரணம் குறித்து, அவருடன் பயிற்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி என்று கூறி, நேற்று வாட்ஸ் அப்பில் ஒரு வேண்டுகோள் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் பல பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
வாட்ஸ் அப் வேண்டுகோள்
"அன்புள்ள ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு, நான் தற்கொலை செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரியின் பேட்ச்மேட். எழும்பூரில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளின் மெஸ்சில் அறை எண் 104ல் தங்கி இருந்தார் ஹரீஸ். நானும் வேறு ஒரு கேடரில் இருப்பதால் உயிர் தப்பினேன் என்றே கூறலாம். காரணம் நான் தற்போது உயிருடன் இருப்பதுதான். ஹரீசை பொருத்தவரை அவர் எந்தவிதமான சார்பும் இல்லாமல் செயல்பட்டார். இது உலகுக்கே தெரியும். காவல்துறையில் அரசியல்வாதிகளின் தலையீடுகளை அவர் அனுமதித்தது இல்லை.
ஹரீஸ் அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் 2008ல் அகில இந்திய அளவில் 186வது இடத்தை பிடித்தார். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
அவர் மிகவும் திறமை வய்ந்தவர்.
ஒரு காலத்தில் காதல் தோல்வியால் மது பழக்கத்திற்கு ஆளாகி இருந்தார். ஆனால், அது ஒரு விசயம் அல்ல. அது நடந்து முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த காயத்தில் இருந்து அவர் மீண்டு வந்து விட்டார்.
நான் தற்போது, எழுதியுள்ள இந்த கடிதத்தின் நோக்கமே தமிழகத்தில் அடிமைகளாக ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்க கூடாது என்பதை ஹரீசின் மரணத்தில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். காரணம் ஹரீஸ் தனிப்பட்ட முறையிலும், நடத்தையிலும், உறுதியாக இருந்தார். ஆனால், இப்படி கடமை உணர்வு தவறாமல் செயல்பட்ட ஹரீசை அவரது மூத்த அதிகாரிகள் காப்பாற்றவோ, ஆதரிக்கவோ, ஆறுதல் படுத்தவோ இல்லை. சரி, அதை விட்டு விடுவோம்
இறந்த போன ஹரீசை பெண் பித்தனாகவும், மது அடிமையாகவுத் சித்தரிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. ஒருவரது மரணத்திற்குப் பிறகு இவ்வாறு செய்ய வேண்டாம்.
வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி, வரிமான வரித்துறைக்கு பயந்தார், டி.எஸ்.பி விஷ்ணு பிரியா காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார் என்று கதை கட்டியது போல இதையும் இழிவுபடுத்த வேண்டாம்.
தயவு செய்து இறந்து போன ஹரீஸ் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர் ஒட்ட வேண்டாம்.
அவருக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினைகள் இருந்தாலும் அதிகாரிகள் யாரும் அவருக்கு ஆறுதலாக இல்லை. இதுவே மெல்ல கொல்லும் விஷம் போல தமிழக காவல்துறை அவருக்கு அளித்துள்ளது. முன்னாள் டிஜிபி ராமானுஜம் தினந்தோறும் விசாரணை என்ற பெயரில் ஹரீசுக்கு தொந்தரவு கொடுத்து வந்தார்.
ஒருமுறை காவல் துறை ஆய்வுக் கூட்டத்தில் எனக்கு எஸ்பி ப்ரமோசன் அளிக்க வேண்டும் என்று ஹரீஸ் கெஞ்சினார். ஆனால், அப்போது, டிஜிபியாக இருந்த ராமானுஜம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இன்றைக்கு தமிழக மக்களுக்கு என்னுடைய முக்கியமான வேண்டுகோள் என்னவென்றால் தயவு செய்து தற்கொலை செய்து கொண்ட ஹரீஸ் நடத்தை பற்றியோ அவரது குணத்தை பற்றியோ கொன்று விடாதீர்கள். காரணம் அவர் தற்கொலைக்கு முதுகெலும்பில்லாத மூத்த காவல்துறை அதிகாரிகள் காரணம்.
எனக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின்படி அவர் மன இறுக்கத்தை போக்கக்கூடிய மாத்திரைகளை உட்கொண்டதுதான் அவரது மரணத்திற்கு காரணம் என தெரிய வந்திருக்கிறது.
எங்களுக்கு விடிவு தேவை. ஹரீஸ் நடத்தையை அசிங்கப்படுத்த வேண்டாம். தமிழக முதல்வர் அவர்களே உங்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தேவை இல்லை என கருதினால் குடியரசு தலைவருக்கு தயவு செய்து கடிதம் எழுதுங்கள். தயவு செய்து அதிகாரிகளை கொல்வதை நிறுத்த சொல்லுங்கள்.
ஹரீஸ் மரணத்திற்கு தமிழகத்தில் உள்ள பெண் உயர் அதிகாரி மிகவும் கேவலமாக பேசியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. தமிழ்நாடு கேடருக்குள் வராத ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிப்பது காவல்துறையில் மட்டுமே நடக்கிறது. இது தமிழக அதிகாரியான ஹரீசுக்கு மன இறுக்கத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தியதாக கருதினார். இதுவே அவருடைய தற்கொலைக்கு மற்றொரு காரணம் என்று அந்த வாட்ஸ் அப் தகவல் தெரிவிக்கிறது.
டிஜிபி அசோக்குமார் விளக்கம்
இந்த வாட்ஸ் அப் தகவலுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி அசோக்குமார், ஹரிஷ் மரணம் தொடர்பாக விவகாரத்தை தேவையில்லாமல் திசை திருப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஹரிஷ் மரணம் இயற்கையானது என கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மை நிலை தெரிய வரும் என தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை நிறைவு
இதனிடையே மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி ஹரீஷின் பிரேத பரிசோதனை, சென்னை ராஜிவ் அரசு மருத்துவமனையில் நிறைவடைந்துள்ளது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. தற்கொலை செய்துகொண்டாரா அல்லது மாரடைப்பு காரணமாக மரணமடைந்தாரா என்பது பிரேத பரிசோதனையின் அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.