சென்னையில் பலத்த காற்றுடன் மழை; இன்றும் பெய்யும் என்கிறார் ரமணன்
சென்னை: சென்னையில் வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. திடீர் மழை காரணமாக குளுமை பரவியதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும்(வெள்ளிக்கிழமை) மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
சென்னையில் கடந்த சில நாள்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் கோடை முடிந்தும் நிலவி வந்த அனல் சற்றே குறைந்து குளுமை பரவிவருகிறது.
காற்றுடன் பெய்த மழை
நேற்று இரவு சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், தாம்பரம், உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாலை முதல் மழை பெய்தது.
முறிந்த மரங்கள்
இந்த மழையில் சென்னையில் ஏராளமான மரங்கள் சாலையில் விழுந்தன. மேலும் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
வெளுத்து வாங்கிய மழை
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 9 செ.மீட்டர் மழையும், தேனி மாவட்டம் பெரியாறு, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆகிய இடங்களில் தலா 6 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
பரவலாக பெய்த மழை
நீலகிரி மாவட்டம் தேவலா, கோவை மாவட்டம் வால்பாறையில் 5 செ.மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, காஞ்சீபுரம், ஜி பஜார் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீட்டர் மழையும்,பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, புழல், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், தேனி மாவட்டம் உத்தமப்பாளையம் ஆகிய இடங்களில் 2 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது. ஆவடி, செங்குன்றம், தாமரைப்பாக்கம், அரக்கோணம், வடசென்னை, செங்கல்பட்டு, மகாபலிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, ஆகிய பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்துள்ளது.
குமரி மாவட்டத்திலும்
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல், குளைச்சல், பேச்சிப்பாறை, தேனி மாவட்டம் கூடலூர் உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில்
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை திடீரென மேக மூட்டத்துடன் மழை பெய்யத் தொடங்கியது. வாணியம்பாடி, ஆம்பூர், அரக்கோணம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வேலூர், ஆலங்காயம், காவேரிப்பாக்கம் பகுதிகளில் லேசான மழை பெய்தது. மற்ற இடங்களில் சாரல் மழை பெய்ததது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதேபோல் திருவண்ணாமலை, ஆரணி, போளூர், கண்ணமங்கலம், செய்யாறு, வந்தவாசி பகுதிகளிலும் சாரல்மழை பெய்தது. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வெப்பச்சலனத்தால் மழை
இந்தநிலையில் வெப்ப சலனமாக சென்னை உள்பட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும்(வெள்ளிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.