சென்னை பல்கலை கட்டிடத்தின் மீதேறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாணவர்: மீட்ட போலீஸ்
சென்னை: சென்னை பல்கலைக் கழகத்தில் கட்டிடத்தின் மீது ஏறி மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப் போவதாக மாணவர் ராஜ்குமார் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு படையினரும், போலீசாரும் இணைந்து தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவரை பத்திரமாக மீட்டனர்.
சென்னை பல்கலைக்கழக மாணவர்களால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி நடத்தப்பட்ட போராட்டத்தினை தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர், இதில் 6 பேரை தவிர மாற்றவர்கள் மீண்டும் சேர்த்து கொள்ளப்பட்டனர். அதேபோல, மாணவர்கள் பேரவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வந்தது. இதற்கு பல்கலை நிர்வாகம் அனுமதி மறுத்து வந்தது.

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று பல்கலை வளாகத்தில் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் மீண்டும் பல்கலையில் சேர்க்க வேண்டும். அதேபோல, பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவி காலம் வரும் 18ம் தேதியுடன் முடிவடைகிறது.
அதற்கு முன் மாணவர் பேரவை அமைக்க பல்கலை நிர்வாகம் அனுமதி தர வேண்டும். இதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார். முன்னதாக, சென்னை பல்கலை நுழைவு வாயிலில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இங்கு கூட்டம் கூடவோ, போராட்டம் நடத்தவோ அனுமதியில்லை என்று போலீசார் மாணவர்களிடம் தெரிவித்தனர். இதனால், மாணவர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனிடையே சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர் ராஜ்குமார் இன்று 12 மணியளவில் பல்கலைக்கழக மாடியில் நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். தீக்குளிக்கக் போவதாக மிரட்டிய ராஜ்குமார், கையில் மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியுடன் மிரட்டல் விடுத்தார்.

மாணவரை கீழே இறங்கச் செய்ய போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் போலீசார் மாணவரை மீட்டு கைது செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ராஜ்குமாரை போலீசார் அழைத்துச் செல்ல மற்ற மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பேராசிரியருக்கு ஆதரவாக போராடிய 6 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இடை நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர் ராஜ்குமார் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications