தமிழக அரசுக்கு எதிராக மாணவர் எழுச்சி ஏற்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் பேச்சு
புதுக்கோட்டை: மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுக்கும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
புதுக்கோட்டை வந்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். பின்னர் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த எழுச்சியால் 2016ம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலில் தமிழகத்தில் மாற்றம் வரும். 2011ம் ஆண்டிலேயே மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பினர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
தற்போது என்னை சந்தித்த மாணவர்கள் தி.மு.க. ஆட்சி காலத்தில் கல்வி உதவித்தொகை முறையாக கிடைத்தது, ஆனால் தற்போது உதவித்தொகை பெறுவது கஷ்டமாக இருப்பதாக தெரிவித்தனர். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக இருந்தது.
இதுவரை நான் 20 மாவட்டங்களில் ஆய்வு கூட்டங்கள் நடத்தி உள்ளேன். இன்னும் 15 நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் கள ஆய்வு கூட்டத்தை நடத்தி முடித்து விடுவேன். கட்சி முன்னோடிகள் முதல் மாணவ, மாணவியர் வரை அனைவரிடமும் எழுச்சி உள்ளது. எனவே தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது.
தி.மு.க. ஆட்சியில் ஆவின் நஷ்டத்தில் இயங்கியதாக முதல்வர் பன்னீர் செல்வம் கூறுகிறார். நான் அவரிடம் கேட்கிறேன், ஆவின் நிறுவனத்தில் ஊழல் செய்த வைத்தியநாதன் ஏன் கைது செய்யப்பட்டார்? பால் வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி நீக்கப்பட்டது ஏன்?. இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.
ஆவின் நிறுவன ஊழலை மறைக்கவே அ.தி.மு.க. அரசு பால் விலையை உயர்த்தி உள்ளது. தி.மு.க. ஆட்சியில் பால் விலையை உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கேட்ட போது பால் கொள்முதல் விலையை வேண்டுமானால் உயர்த்துவேன், பால் விலையை ஒரு சல்லிகாசு கூட உயர்த்த மாட்டேன் என கருணாநிதி கூறினார்.
தி.மு.க. ஆட்சியில் ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.17.25 காசு. அதற்கு பிறகு வந்த அ.தி.மு.க. அரசு லிட்டருக்கு ரூ.6.25 காசு உயர்த்தியது. தற்போது மீண்டும் ரூ.10 உயர்த்தி உள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வரும் 2016ம் ஆண்டில் தமிழகத்தில் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.