ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 55வது நாளாக போராட்டம் : வகுப்புகளைப் புறக்கணித்த கல்லூரி மாணவிகள்
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து வலுத்து வருகிறது. மக்களின் போராட்டம் இன்று 55வது நாளை எட்டியுள்ளது. போராட்டத்திற்கு பல்வேறு கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆதரவு வழங்கி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தற்போது செயல்பட்டு வரும் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும் அப்பகுதியைச் சேர்ந்த அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த அறவழிப்போராட்டம் 55 நாளாக இன்றும் தொடர்கிறது.
இந்தப் போராட்டத்திற்கு பக்கத்து கிராமங்களான சங்கரப்பேரி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம், பண்டாரம்பட்டி ஆகிய கிராம மக்களும் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கிராம மக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகளும் இந்த ஆலைக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
சமூகவலைத்தளங்களிலும் ஸ்டெர்ட்லைட் எதிர்ப்பு கோஷம் வலுத்துவருகின்றது. இந்நிலையில், ஸ்டெர்ட்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவிகள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பல கல்லூரி மாணவ மாணவிகளும் போராட்டக்களத்திற்கு வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். போராட்டத்திற்கு ஆதரவு தொடர்ந்து பெருகி வருவதால், அப்பகுதியில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.