சென்னை பறக்கும் ரயில் தடத்துடன் புறநகர் ரயில் தடங்கள் இணைப்பு - புதிய சேவை அறிமுகம்
சென்னை: சென்னை பறக்கும் ரயில் தடத்துடன் புறநகர் ரயில் தடங்களை இணைத்து நாளை முதல் புதிய ரயில் சேவைகளை அறிமுகப் படுத்துகிறது தெற்கு ரயில்வே.
இதன்படி, அரக்கோணம் - சென்னை கடற்கரை, சூலூர்பேட்டை - சென்னை கடற்கரை ரயில் பறக்கும் ரயில் மார்க்கத்துடன் இணைக்கப் படுகிறது. மேலும், அரக்கோணம், சூலூர்ப்பேட்டை ரயில்கள் வேளச்சேரி வரை நீட்டிப்பு செய்யப் படுகிறது.

இப்புதிய சேவையின் படி, அரக்கோணத்தில் காலை 7 மணிக்குப் புறப்படும் ரயில் 9.45க்கு வேளச்சேரிக்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதேபோல், காலை 7.40க்கு ஆவடியில் புறப்படும் ரயில் கடற்கரை வழியே 9.20க்கும், காலை 7.05க்கு புறப்படும் பொன்னேரி கடற்கரை ரயில் 8.55க்கும் வேளச்சேரி வந்தடையும்.
தென் சென்னைக்கு லாபம்
இந்தப் புதியசேவையால், தென் சென்னை பகுதி மக்களுக்கு பெரும் லாபம் கிடைத்துள்ளது. அதாவது ஆவடி, அம்பத்தூர், அரக்கோணம் போன்ற இடங்களுக்குச் செல்ல இனிமேல் சென்டிரல் ரயில் நிலையத்திற்குப் போகத் தேவையில்லை. மாறாக வேளச்சேரி முதல் கடற்கரை வரை உள்ள தங்களுக்கு அருகில் உள்ள பறக்கும் ரயில் நிலையங்களான வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், அடையாறில் இந்திரா நகர், கஸ்தூரிபா நகர், கோட்டூர்புரம், கிரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், மந்தைவெளி, மயிலாப்பூர், முண்டகக் கண்ணி அம்மன் கோவில், கலங்கரை விளக்கு, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்கள் மூலமாக அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக செல்ல முடியும்.
விரைவில் வேளச்சேரி முதல் பரங்கி மலை வரையிலான ரயில் பாதைத் திட்டம் நிறைவேறினால் தாம்பரம், செங்கல்பட்டு வரை ரயில் இணைப்பு வசதி கிடைத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications