தி.மு.க. துணைப் பொதுச்செயலராக திண்டுக்கல் ஐ.பெரியசாமிக்கு 'புரமோஷன்'!!
சென்னை: 2016 தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை சமூக வாக்குகளைப் பெறும் வகையில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஐ. பெரியசாமி, மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரை துணைப் பொதுச்செயலாளராக்கியிருக்கிறது தி.மு.க.
தமிழக சட்டசபை மற்றும் அண்மையில் நடைபெற்ற லோக்சபா தேர்தல்களில் தி.மு.க. தோல்வியைத் தழுவி நெருக்கடிக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் நிர்வாக அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பெரும் களேபரங்களுக்கு இடையே உட்கட்சித் தேர்தலை நடத்தி முடித்த கையோடு 2016 சட்டசபை தேர்தலுக்கான வியூகத்தைத் தி.மு.க. தொடங்கிவிட்டது.
சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக் குழுவில் துணைப் பொதுச்செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் ஐ. பெரியசாமி மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியாக இருக்கும் முக்குலத்தோரிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அந்த சமூகத்தைச் சேர்ந்த ஐ.பெரியசாமிக்கு தலைமை நிலையப் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் தி.மு.க.வில் மிக நீண்டகாலமாக அங்கீகாரம் கிடைத்தும் கிடைக்காமலுமாக இருந்து வந்த சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு மீண்டும் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மேற்கு மாவட்டங்களின் கணிசமான வாக்கு வங்கியான கவுண்டர் சமூகத்தினரிடம் நம்பிக்கையைப் பெற தி.மு.க. முனைகிறது. அதே நேரத்தில் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு மீண்டும் கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தை தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியுடனேயே வரவேற்றுள்ளனர்.
இதனிடையே தலைமை நிலைய பதவி எதுவும் கிடைக்காததால் வடமாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. தலைவர்களான பொன்முடி, எ.வ. வேலு ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.