அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவிற்கு பெருகும் ஆதரவு - தகுதியில்லை என்கிறது சட்டப்பஞ்சாயத்து
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவே பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக இலக்கிய அணி, அதிமுக மீனவர் பிரிவு, ஜெயலலிதா பேரவை, சத்திரிய நாடார் இயக்கம் ஆகியவவைகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
சென்னை: அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி ஜெயலலிதா என்று டிசம்பர் 5ம் தேதிவரை கூறிக்கொண்டிருந்த அதிமுக நிர்வாகிகள்தான் சசிகலாவை பொதுச்செயலாளராக பதவியேற்க கோரி தினசரியும் போயஸ் கார்டன் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
1972ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுகவை 30 ஆண்டு காலம் கட்டிக்காத்த ஜெயலலிதா, 7 முறை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டவர். அவரது மறைவுக்குப் பின்னர் அந்த இடத்தை நிரப்பப் போவது யார் என்பதுதான் அரசியல் வல்லுனர்களின் கேள்வி. எம்.ஜி.ஆருக்கு வாரிசு என்று யாரும் இல்லாத காரணத்தால் அவரது அரசியல் வாரிசு என்று கூறி பெரிய போராட்டத்திற்குப் பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார் ஜெயலலிதா.
ஜெயலலிதா உடன் 30 ஆண்டுகாலம் போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக இப்போது சசிகலாவை, அதிமுக பொதுச்செயலாளர் பதவி ஏற்க கூறி தீர்மானம் போட்டுக்கொண்டு போயஸ் தோட்டத்திற்கு அணி அணியாக படையெடுக்கின்றனர் அதிமுகவினர்.
ஜெயலலிதா பேரவை தீர்மானம்
வடசென்னை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டம் ஆர்.கே.நகரில் ஜெ.பேரவை மாவட்டச் செயலளார் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாகவும், கடந்த 35 ஆண்டுகளாக அம்மாவுக்கு உறுதுணையாக இருந்த சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்கும்படி வலியுறுத்துதல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இலக்கிய அணி கூட்டம்
அதிமுக இலக்கிய அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஜெயலலிதா நினைவிடத்தில் மாநில இலக்கிய அணிச் செயலாளர் பா.வளர்மதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், தமிழக சட்டசபையில் அம்மாவின் திருவுருவப் படத்தை வைக்க வேண்டும். அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் அம்மாவின் முழு உருவ வெண்கலச் சிலையை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
சின்னம்மா பதவி ஏற்கவேண்டும்
அம்மாவின் சிந்தனைத் திறன், மனித நேயம், அறிவாற்றல், தொலைநோக்குப் பார்வை ஆகிய அத்தனை சிறப்புகளையும் கொண்டிருப்பவர் சின்னம்மா. எனவே கழகத்தை கட்டுக்கோப்புடன் வழிநடத்திச் செல்ல நல்லதொரு தலைவியாக நமக்கு கிடைத்திருக்கிறார் சின்னம்மா. எனவே, அவர் விரைவில் அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக மீனவர் பிரிவு
அதிமுக மீனவர் பிரிவு செயலாளர் நீலாங்கரை எம்.சி.முனுசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும். அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் அதைத்தான் நினைக்கிறார்கள் என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சத்திரிய நாடார் இயக்கம்
தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் இயற்றியுள்ள தீர்மானத்தில், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் கடந்த காலங்களில் அதிமுக வெற்றிக்காக பாடுபட்டுள்ளது. மேலும், நாடார் சமுதாயத்தை பெருமைப்படுத்திய புரட்சித் தலைவி அம்மாவை எங்கள் சமுதாய மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். ஜெயலலிதாவின் நிர்வாகத்தை இந்தியாவின் இரும்பு மங்கை என்று இந்தியா மட்டுமல்ல உலகமே பாராட்டுவதற்கு அவரோடு உறுதுணையாக நின்றது சசிகலாதான் என்பதை உலகறியும். எனவே, சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத்தின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
சட்ட பஞ்சாயத்து இயக்கம்
அதிமுக பொதுச்செயலராக சசிகலா பொறுப்பேற்கக் கூடாது என சட்ட பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கத்தைச் சேர்ந்த சிவ.இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசியலில் கால் நூற்றாண்டு காலம் தவிர்க்க முடியாத சக்தியாக கோலோச்சி, அதிமுக என்ற அரசியல் இயக்கத்தை கட்டுகோப்புடன் வழி நடத்தி துணிச்சல், திறமை, அசாத்திய நம்பிக்கையுடன் பல அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வெற்றி கண்டவர் ஜெயலலிதா.
|
சசிகலாவிற்கு தகுதியில்லை
யார் யாருக்கோ கட்சி பதவி கொடுத்து அழகு பார்த்த ஜெயலலிதா, எம்.எல்.ஏ., எம்.பி.,யாக்கி அழகு பார்த்த ஜெயலலிதா, தனது உடன் பிறவா சகோதரியாக அறிவிக்கப்பட்ட சசிகலாவுக்கு தகுதிகள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் அவருக்கு எந்தப் பொறுப்பையும் ஜெயலலிதா கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார் சிவ. இளங்கோ.