கீழே விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல.. மனுவை தள்ளுபடி செய்யாத சுப்ரீம் கோர்ட்டு குறித்து பாலு
புதிய சட்டத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்யாமல், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற அளவில் உச்ச நீதிமன்றம் நடந்து கொண்டுள்ளது என்று பாமக வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு தொடர்பான புதிய சட்டத்திற்கு தடை கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்திருக்க வேண்டும் என்று பாமக வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.
இதுகுறித்து வழக்கறிஞர் பாலு மேலும் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தடை வழங்க மறுத்திருப்பது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. முன்பே இதனை செய்திருந்தால் இப்படி ஒரு நிலைமை தமிழகத்தில் உருவாகி இருக்காது. தமிழக அரசும் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்காது.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கேட்ட போது, அதற்கென்ன அவசரம் என்றும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியது. ஆனால், இன்று மாநில அரசின் சட்டத்திற்கு தடை வழங்க தயக்கம் காட்டியதோடு, தடை விதிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறது. அதுதான் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.
ஒட்டு மொத்தமாக தமிழர்களின் கலாச்சாரம், நாகரிகம் தொடர்புடைய விஷயம் இது என்பதை மத்திய அரசுக்கு புரிந்திருக்கிறது. உச்ச நீதிமன்றமும் இந்த மனுக்களை எல்லாம் முழுமையாக தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஆனாலும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் உச்ச நீதிமன்றம் தற்போது நடந்து கொண்டுள்ளது.
நிச்சயமாக, தமிழகத்தில் நடக்கக் கூடிய ஜல்லிக்கட்டை உச்ச நீதிமன்றத்தாலும், மத்திய அரசாலும் பீட்டா போன்ற அமைப்புகளாலும் தடுத்த நிறுத்த முடியாது என்பதை நடைபெற்ற போராட்டம் மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது. இதே போன்று காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளிலும் நல்ல தீர்ப்புகளை நாம் எதிர்காலத்தில் அடைவோம் என்று நம்புகிறேன் என்று வழக்கறிஞர் பாலு கூறினார்.












Click it and Unblock the Notifications