"ஆச்சரியம் ஆனால் உண்மை"... ஜெயா டிவி வரலாற்றிலேயே முதன்முறையாக திமுக சீனியரின் நேர்காணல்!
ஜெயா தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன்முறையாக திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகனின் நேர்காணல் இடம்பெற்றுள்ளது.
சென்னை : ஜெயா தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன்முறையாக எதிர்க்கட்சியான திமுகவை சேர்ந்த துரைமுருகனின் நேர்காணல் ஒளிபரப்பப்பட்டுள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி சார்பான செய்திகளை வெளியிடுவதற்காகவும், பிரத்யேகமாக அவர்களைப் பற்றிய விஷயங்களை மட்டுமே கட்சியினர் மத்தியில் பிரபலப்படுத்தவும் அந்தந்த கட்சிகளும் தங்களுக்கென தனித் தனி சேனல்களை உருவாக்கிக் கொண்டன. ஜெயா டிவி என்றால் அது அதிமுகவினரின் சேனல், சன்டிவி, கலைஞர் டிவி என்றால் அது திமுகவினரின் சேனல் என்பது நாடறிந்த விஷயம்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலும் சரி அவர் ஆட்சியில் இல்லாத காலத்திலும் சரி திமுகவினரை கீழிறங்கி கிழித்து தொங்க விடுவது தான் இந்த சேனலின் வேலை. அதிலும் தேர்தல் சமயம் என்றால் கேட்கவே வேண்டாம். திமுகவினர் எங்கெங்கு வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டு போட்டார்கள், குண்டர்களை வைத்து மிரட்டினார்கள் என்றெல்லாம் செய்தி அனல் பறக்கும்.
ஆச்சரியம் ஆனால் உண்மை
அப்படிப்பட்ட ஜெயா தொலைக்காட்சியின் ஜெயா ப்ளஸ் 24 மணி நேர செய்தி சேனலில் நேற்று இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகனின் நேர்காணல் ஒளிபரப்பட்டுள்ளது. அதிமுகவினரை மட்டுமல்ல திமுகவினரையும் இந்த நிகழ்ச்சி ஆச்சரியமடைய வைத்துள்ளது.
மூத்த அரசியல்வாதி
பேட்டியின் தொடக்கத்தில் துரைமுருகன் பேசியதாவது : நான் எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டேன், எதையுமே லேசில் எடுத்து பழகிக் கொள்வேன். கருணாநிதிக்கு அடுத்து நான் தான் சட்டசபையில் சீனியர் கிட்டதட்ட 40 ஆண்டு அரசியல் அனுபவம் உண்டு. நான் வக்கீல் வேறு. அதனால் நான் என்ன கருத்து சொன்னாலும் அதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.
கொள்கையில் உறுதி
எனக்கு கொள்கையில் உறுதி உண்டு ஆனால் அதற்காக நான் பகைமை உணர்வை பாராட்ட மாட்டேன். எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரியான பாயிண்ட்டை பேசினால் பாராட்டுவேன். ஒரு வீரனை இன்னொரு வீரன் பாராட்ட வேண்டும்.
ஜெ. வுடன் சகஜமாக பேசி இருக்கிறேன்
சட்டசபையில் நானும் ஜெயலலிதாவும் பேசி இருக்கிறோம். நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது ஜெயலலிதா என்ன புத்தகம் படிக்கிறீர்கள் என்று என்னைப் பார்த்து கேட்டார். நான் அவரிடம் பிரிட்டிஷ் வரலாறு என்று சொன்னேன் அதற்கு வேறு ஒரு ஆசிரியரின் பெயரைச் சொல்லி என்னை படிக்கச் சொன்னார்.
திறமையானவர்களை பாராட்ட வேண்டும்
ஊட்டியில் பிளாஸ்டிக் போடுவதை எதிர்த்து ஒரு மசோதா குறித்து விவாதம் நடந்த போது ஜெயலலிதா பேசியதை பாராட்டி இருக்கிறேன். யாரிடத்தில் திறமை இருந்தாலும் அவர்களை நான் பாராட்டுவேன் என்று கூறினார்.