சுவாதி கொலை வழக்கு: சென்னை போலீஸ் கமிஷனர், ரயில்வேக்கு மகளிர் ஆணையம் அதிரடி நோட்டீஸ்! 2 வாரம் கெடு
சென்னை: இன்போசிஸ் ஊழியல் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை காவல்துறை கமிஷனர் மற்றும் தெற்கு ரயில்வே உரிய பதிலை 2 வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்று ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து, வாலிபர் ஒருவரால் இன்போசிஸ் ஊழியர் சுவாதி (24) வெட்டி கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கியுள்ளது இந்த கொலை சம்பவம்.
பணிக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பு, பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த கொலையின் ஊடே எழுகிறது.
தலையிட்ட ஆணையம்
இதையடுத்து, விவகாரத்தில் தலையிட்டுள்ளது தேசிய மகளிர் ஆணையம். சுவாதி கொலை சம்மந்தமாக சில கேள்விகளை எழுப்பியுள்ள ஆணையம், சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர் மற்றும் தெற்கு ரயில்வே இந்த கொலை தொடர்பாக தங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2 வாரங்கள் கெடு
இன்னும் 2 வாரங்களுக்குள், கமிஷனரும், தெற்கு ரயில்வேயும், தங்கள் நோட்டீசுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று மகளிர் ஆணையம் கெடு விதித்துள்ளது.
விசாரணை குழு
போலீஸ் கமிஷனர் மற்றும் தெற்கு ரயில்வே தங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் பதில் கூறாவிட்டால், மகளிர் ஆணையம் சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டிவரும் என்றும் அந்த நோட்டீசில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஆஜராகுவது கட்டாயம்
இவ்வாறு விசாரணை குழுவை மகளிர் ஆணையம் அமைத்தால், போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள், அந்த குழுவின் முன்னால் ஆஜராகி பதில் அளிக்க வேண்டிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.