நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டவர்கள் நீட்டை எப்படி எதிர்ப்பார்கள்! - டி ராஜேந்தர்
சென்னை: நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டவர்கள் நீட் தேர்வை எப்படி எதிர்ப்பார்கள் என கேள்வி எழுப்பினார் டி ராஜேந்தர்.
சிம்புவின் 'சரஸுடு' பட பிரஸ்மீட்டில் டி ராஜேந்தர் பேசுகையில், "காவிரி பிரச்சனை, ஜி.எஸ்.டி என தமிழகத்தை பாதிக்கும் பிரச்சனைகளில் மத்திய அரசை வலுவாக எதிர்த்த வீராங்கனைதான் அம்மா (ஜெயலலிதா). அப்படித்தான் அவர் இருக்கும் வரை நீட் தேர்வை தமிழ்நாட்டு பக்கம் அனுமதிக்கவில்லை.. காரணம் இப்படி அனிதா போல ஒரு மாணவி தனது உயிரை இழந்துவிட கூடாது என்பதற்காக.
அடித்தட்டுமக்கள், ஏழை மக்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக, கனவாக போய்விடும் என்பதால் தான் தொடர்ந்து நீட்டை எதிர்த்தார்... அது அம்மா ஆட்சி.. ஆனால் இன்று நீட்டின இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டுவிட்டு ஆட்சி நடத்துகிறார்கள்.. இது அம்மாவை ஏமாத்துகின்ற சும்மா ஆட்சி.. யாராலோ ஆட்டுவிக்கப்படும் பொம்மை ஆட்சி.
கிட்டத்தட்ட 88 எம்.எல்.ஏக்களை கையில் வைத்துக்கொண்டு பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவும் இதை வலுவாக எதிர்க்கவில்லை.. நீட் தேர்வை அனுமதிக்க ஏன் கையெழுத்து போட்டீர்கள் என மு.க.ஸ்டாலினால் தைரியமாக கேட்க முடியவில்லையே ஏன்..? ஏனென்றால் இரண்டு கட்சிகளின் தலைக்குமேலும் கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறது.
மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் இதெல்லாம் தமிழகத்திற்குள் வர காரனமானவர்கள்தான் இன்று, நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் மங்கலம் பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.. நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்.. நீட் தேர்வை இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டவர்கள் தான் தமிழகத்திற்கு மட்டும் விலக்கு கேட்பதாக நாடகமாடுகிறார்கள்.
இந்த போலியான அரசியல்வாதிகளை மக்கள் நம்பவில்லை. ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு எல்லாவற்றிலும் மாணவர்களும், இளைஞர்களும் தான் களமிறங்கி போராடுகிறார்கள். நான் மோடி அரசை குறை சொல்லவில்லை.. இங்கே உள்ளவர்கள் ஏன் அவர்களுக்கு அர்ச்சனை செய்து, பூஜை செய்து சேவிக்கிறார்கள்..? மடியில் கனம் இருப்பதால்தானே..?
சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தபோது அது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்பதால் அதை நான் எதிர்க்கவில்லை.. ஆனால் அதே சசிகலா முதல்வர் ஆக ஆசைப்பட்டபோது அது வேண்டாம், அந்தம்மா ஆக முடியாது, இது அவரை சிக்க வைக்கும் சூழ்ச்சி என முதல் ஆளாக குரல் கொடுத்தவன் நான்.. அதைக் கேட்டிருந்தால் இருந்திருக்கலாம் குளுகுளு அறையில்.. கேட்காததால் இன்று அந்தம்மா இருக்கிறார் சிறையில்.
இப்போது பொதுக்குழுவைக் கூட்டி தீர்மானம் போட்டார்களே, அதில் அம்மாவை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்ததில் இருந்து அவர் மரணத்தை தழுவிய நாள் வரை என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்போம் என தீர்மானம் போடவில்லையே.. இதற்காக கமிஷன் அமைக்கவேண்டும், உண்ணாவிரதம் இருப்பேன் என சொன்ன ஓ.பி.எஸ் அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டார். அப்பல்லோ மர்மம் பற்றி இனி அப்படியே மறந்துவிடுவார்கள்.
நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை ஏன் தீர்மானம் இயற்றவில்லை.. அதேசமயம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா இருந்த இடத்தில் வேறு யாரும் பொதுச்செயலாளராக இருக்க தகுதியானவர் இல்லை என தீர்மானம் போட்டார்களே.. அது ஒன்றுதான் உண்மை.