ஆடிமாதம் பிறந்தது: ஆறுகளில் வெள்ளம்... களைகட்டிய பண்டிகை
சென்னை: தமிழ் மாதத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமான அதே சமயம் அபூர்வமான மாதம் ஆகும். அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் இந்த ஆடி மாதத்தில் தான் ஆடிப்பெருக்கு விழா... சிறப்பாக கொண்டாடப்படும்.
ஆடியும், விவசாயமும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவை. 'ஆடியில் காத்தடித்தால் ஐப்பசியில் மழை பொழியும்' என்பதை முன்னோர் கணித்து 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்றனர். வானம் பார்த்த பூமியில் பயிரிடும் விவசாயிகள் 'ஆடிப்பட்டம் எப்போ வரும்?' என காத்திருப்பர்.
ஆடி மாதம் துவங்கியதும் வறண்ட பூமியை ஆழமாக உழுது மானாவரி சாகுபடிக்காக சூரிய பகவானை வணங்கி வானத்தை பார்த்து பூமியில் விதைகளை விதைப்பர்.
ஆடி மழை பெய்ததும் விதைகள் துளிர்விட்டு பயிர்களாக வளர்ந்து விவசாயிகள் வயிற்றில் பால்வார்க்கும். ஆடியில் விதைத்து ஐப்பசியில் அறுவடை செய்து தானியங்களை சேகரித்து வைப்பர்.
சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதம் கரும்புடன் பொங்கலிட்டு வணங்குவர். இது ஆண்டாண்டு காலமாக தமிழர்கள் கடைப்பிடிக்கும் விவசாய பண்பாடு.
இன்று ஆடிபிறப்பையொட்டி பவானி, ஈரோடு, கொடு முடிக்கு கூட்டம் வரத் தொடங்கி உள்ளது. பவானி கூடுதுறைக்கு இன்று ஆடி முதல் நாளிலேயே புதுமண தம்பதிகள் வரத்தொடங்கி உள்ளனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.
சூரியனின் பயணம்
பூமத்திய ரேகைக்கு வடக்கே சூரியனின் ஓட்டம் இருக்கும்போது (ஜனவரி முதல் ஜூன் வரை - தை முதல் ஆனி வரை) உத்தராயணம் என்கிறோம். சூரியனின் ஓட்டம் தெற்கே இருக்கும்போது (ஜூலை முதல் டிசம்பர் வரை - ஆடி முதல் மார்கழி வரை) அதை தட்சிணாயணம் என்கிறோம். ஆடி மாதத்தில் தான் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணத்தை துவங்குகிறது.
ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
இந்த மாதத்தில் பகல் நேரம் குறைவாகவும், இரவு அதிகமாகவும் இருக்கும். இதனால் காற்றின் வேகமும் அதிகரிக்கும். ஆடிக் காற்று சூறாவளி போல் சுழன்று வீசுவதால், 'ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்' என்ற பழமொழி, மக்களை நினைவுபடுத்த வைக்கிறது.
தெய்வீக மாதம்
மழையும் ஆடி மாதத்தில் மக்கள் மனங்களை குளிர்விக்க துவங்கி விடும். காற்று, மழை, விவசாயம், தெய்வீகம் என அனைத்திற்கும் ஏற்புடைய இந்த ஆடி 'சக்தி' மாதம் எனவும் போற்றப்படுகிறது.
தாலி பெருக்குதல் வைபவம்
புதிதாக திருமணமாகும் மணப்பெண் அணிந்திருக்கும் மாங்கல்யத்தின் இரு புறமும் லட்சுமி காசு, மணி, பவளம் கோர்த்து, அவரது கழுத்தில் சுமங்கலிப் பெண்கள் அணிவிப்பது தாலி பெருக்குதல் வைபவம். முதன் முதலில் மஞ்சள்கயிற்றை மாற்றும் சடங்கு இது.
புதுமணப்பெண்ணுக்கு சிறப்பு
புதிதாக மாற்றும் போது மங்களகரமான தாலியுடன், லட்சுமி காசு, மணி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இதை ஒற்றைப்படை மாதத்தில் மணமகன் வீட்டில் நடத்துவர். பெரும்பாலும் திருமணமான மூன்றாவது மாதத்தில் இந்த வைபவம் நடக்கும். ஆடிப்பெருக்கன்று இதனை செய்வது சிறப்பு.
ஆறுகளில் வெள்ளம்
ஆடிப்பெருக்கன்று நதிகளில் நீர் பெருக்கு ஏற்படும் என்பது நம்பிக்கை. அன்று நதிக்கரைகளில் வழிபாடு நடத்தப்படும். அந்த நாளில் நதிக்கரைகள், கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் மரபு இருந்துள்ளது.
அம்மனை வேண்டும் பெண்கள்
புதிய திருமண தம்பதிகள் நதிக்கரையில் அன்று இரவு நிலாச்சோறு சாப்பிடும் பழக்கமும் உண்டு. அன்றைய தினம் பெண்கள், கோயில்களில் தாலி கயிறை மாற்றி புதிய தாலி கயிறு அணிவதுண்டு. திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர்.
சர்ப்ப வழிபாடு
தெய்வ வழிபாடுகளுக்கு சிறப்பு பெற்றது ஆடி மாதம். நாகதேவி பூஜை என்று அழைக்கப்படும் சர்ப்ப வழிபாடு எல்லா இடங்களிலும் இந்த மாதம் முழுவதும் சிறப்பாக நடைபெறும். காலம் காலமாக இந்த வழிபாட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அம்மன் கோவில்களில் ஆடி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் கூட்டம் களைகட்டும். கூழ் ஊற்றி வழிபடுவார்கள்.
தலை ஆடி சந்தோசம்
ஆடி பிறப்பை தமிழர்கள் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு மறுவீடு, தலை தீபாவளி, தலை பொங்கல் போல தலைஆடியும் சிறப்பு வாய்ந்தது. மனைவியுடன் தலை ஆடிக்கு மாமியார் வீட்டில் தலை காட்டும் நாள்
ஆடியில் விருந்து
புதுமணத் தம்பதியை, பெண் வீட்டார் அழைத்து புத்தாடைகள், சீர் வரிசைகள் வழங்குவர். இட்லி, பனியாரம், தோசை, விடக்கோழி, ஆட்டுக்கறி விருந்து என பலகாரங்கள் செய்து தம்பதியை அசத்துவர்.
ஆடியில் கூடினால்
ஆடி மாதம் முழுவதும் தனது பெற்றோர் வீட்டில், புதுப்பெண் தங்கியிருப்பார். அதாவது ஆடியில் புதுமணத் தம்பதியர் 'கூடி'னால், சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரை வெயில், குழந்தைக்கு உடல் ரீதியாக பிரச்னை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, ஆடியில் தம்பதியை பிரித்துவிடுவர்.
ஆடி தள்ளுபடி
'மினி தீபாவளியாக' கருதப்படும் ஆடி மாதத்தில் துணிக்கடை முதல் நகைக்கடை வரை தள்ளுபடிகளை வாரி வழங்கி, ஆடியை ஆடிப்பாடி கொண்டாட செய்கின்றன. தீபாவளிக்காக புதுப்புது டிசைன்கள், பொருட்களை அறிமுகப்படுத்திய காலம்மாறி, ஆடிக்காகவே ஸ்பெஷலாக டிஸைன்கள், பொருட்கள், துணிகளை போட்டி போட்டு அறிமுகப்படுத்துவது இப்போது அதிகரித்துவிட்டது.
குலதெய்வ வழிபாடு
ஆடியில் விசேஷமே குலதெய்வ வழிபாடு தான். குலதெய்வத்தைக் கும்பிட பங்காளிகள், உறவினர்கள் ஒன்றாக சேருகின்றனர். புத்தாடைகள் அணிந்து குலதெய்வத்தை வழிபடும் மக்கள், கிடாவெட்டி விருந்து படைக்கின்றனர்.
ஆடி அமாவாசை
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று முன்னோர்கள் வழிபாடு சிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் புனித நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் அளித்து வழிபடுகின்றனர்.
களைகட்டும் கறிவிருந்து
கடைசி ஆடி (ஆடி இறுதிநாள்) மணமகன் வீட்டார், பெண்ணை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செறை தென்மாவட்ட கிராமங்களில் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.