சென்னை குடிநீருக்காக கிருஷ்ணா நீரை திறந்து விடுங்கள் - சந்திரபாபு நாயுடுவுக்கு ஓபிஎஸ் கடிதம்
சென்னையின் குடிநீருக்காக தமிழகத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவிற்கு ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்
சென்னை: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஓபிஎஸ் எழுதியுள்ள கடிதத்தில், வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததால், சென்னையில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனைத் தீர்க்க, உடனடியாக கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு உரிய நீரை திறந்து விட வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னைக்குக் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கண்டலேறு அணையில் இருந்து ஆந்திர - தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே கிருஷ்ணா நதி நீரை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில், உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும்.
தமிழகத்துக்கு குறிப்பாக சென்னையின் முக்கிய நீர் ஆதாரம் வடகிழக்குப் பருவ மழைதான். ஆனால், இந்த ஆண்டு, வடகிழக்குப் பருவ மழை போதிய அளவில் பெய்யவில்லை. இதனால், சென்னைக்கு 57% அளவுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, சென்னையில் உள்ள குடிநீர் ஆதாரங்களான ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. எனவே, சென்னையின் குடிநீர் பஞ்சத்தைப் போக்க கிருஷ்ணா நதியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
எனவே, ஆந்திர அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தி, தமிழகத்துக்கு உரிய நீரை கிருஷ்ணா நதியில் திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.