முதல்வர் என்று யாரும் இருக்கிறார்களா என்றே தெரியவில்லையே - மு.க.ஸ்டாலின் கேள்வி
தஞ்சை: தமிழகத்தில் முதல்வர் என்று யாரேனும் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்கொலை மாநிலமாக மாறி வருகிறது தமிழகம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தஞ்சை மாவட்டம், ராயன்கோட்டை கிராமத்தில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தென்னை வணிக வளாகம் ஆகியவை மூடப்பட்டிருப்பதையும், கல்லணை கால்வாய் இன்னும் தூர்வாரப்படாமல் இருப்பதையும் ஞாயிற்றுக்கிழமை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஸ்டாலின்.
அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஸ்டாலின் அளித்த பதில்கள்:
தென்னை விவசாயிகள் நலனுக்காக:
தஞ்சை டெல்டா மாவட்டத்தில் இந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் தான் தென்னை விவசாயிகள் 90 சதவீதம் பேர். உற்பத்தியாகும் தேங்காய்களை முழு தேங்காயாக மட்டுமே, இப்பகுதி விவசாயிகள் விற்பனை செய்து வந்ததால் போதிய வருமானம் இல்லாத நிலையில் இருந்து வந்தனர். தலைவர் கலைஞர் அவர்கள் இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேங்காயை மதிப்புக் கூட்டு பொருளாக மாற்றும் வகையில் தென்னை வணிக வளாகம் ஒன்றை இங்கே அமைக்க அரசாணை வெளியிட்டு, நிதி ஒதுக்கி ரூபாய் 8 கோடி செலவில் புதுமையான கட்டமைப்பு அனைத்தும் ஏற்படுத்தப்பட்ட வணிக வளாகத்தை திறந்து வைத்தார்.
முடக்கி் போட்ட ஜெயலலிதா அரசு:
ஆனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வளாகத்தை எந்தவித முறையிலும் செயல்படுத்த முடியாத வகையில் இங்குள்ள நவீன தொழிற்நுட்ப கருவிகள் எல்லாம் பழுதாகி செயலிலந்து போகும் நிலையில் இருக்கிறது. இதை உடனே திறக்கப்பட வேண்டும் என்று இங்குள்ள தென்னை விவசாய சங்கங்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்தும், மாவட்ட ஆட்சியாளர்கள் கூட்டத்தில் வலியுறித்தியும் இன்னும் செவி சாய்க்கவில்லை. ஆகையால் உடனே தலைவர் கலைஞர் அனுமதியோடும் திராவிட முன்னேற்ற கழக தலைமையின் ஒப்புதளோடும் விரைவில் இந்த பகுதி மாவட்ட நிர்வாகிகள் பங்கு கொள்ளகூடிய மிகப் பெரிய போரட்டம் நிச்சயம் நடைபெறும்.
கல்லணை தூர் வாரும் பணி பாதிப்பு:
நான் காலை காரில் வருகிற வழியில் தான் கல்லணை கால்வாய் பகுதி தூர்வாரப்படாமல் இருப்பதை கண்டு வந்தேன். இதே கல்லணை கால்வாய் மறுசீரமைப்புப் பணிக்காக 200 கோடி ரூபாய் நபார்டு வங்கியின் மூலம் நிதி உதவி பெற்று முதல் கட்டப் பணிகள் திராவிட முன்னேற்ற கழக அரசால் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் இந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது வேதனைக்குரிய ஒன்று.
கவலைப்படாத அரசு:
எதைப்பற்றியும் இந்த அரசு கவலைப்படுவதில்லை. இதற்கு முன்னர் அவர்களின் தலைவி, விடுதலைக்காக கோயில் கோயிலாக அங்கம் பிரதட்சனம் செய்வது காவடி தூக்குவது ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர் விடுதலையானப் பிறகும்கூட இன்னும் அவர்கள் பணிக்கு திரும்பவில்லை என்பது தான். வேதனைக்குரிய வருந்தத்தக்க விஷயம்.
தற்கொலை மாநிலமாகும் தமிழகம்:
இங்கு அரசு இருக்கிறதா? ஒரு முதலமைச்சர் என்கிறவர் இருக்கிறாரா? என்பதே தெரியாத நிலையில் தான் இந்த அரசாங்கம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து விட்டது. தமிழகம் இன்று தற்கொலை மாநிலமாக மாறி வருகிறது' என்றார் ஸ்டாலின்.