5 மீனவர்கள் விடுதலை: மோடி, ஜெயலலிதாவிற்கு சட்டசபையில் நன்றி, கச்சத்தீவை மீட்க தீர்மானம்
சென்னை: இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை விடுக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் இரண்டாம் நாளான நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லேங்க்லெட் ஆகிய 5 மீனவர்கள், போதைப் பொருள் கடத்தியதாக புனையப்பட்ட வழக்கு ஒன்றில், கொழும்பு உயர் நீதிமன்றம், மரண தண்டனை வழங்கியது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கவும், ராஜ்ஜிய நடவடிக்கைகள் மூலம் அவர்கள் விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், ஒட்டு மொத்த தமிழகமுமே இந்த கோரிக்கையை வைத்தன. மத்திய அரசு மேற்கொண்ட ராஜ்ஜிய நடவடிக்கைகள் காரணமாக இந்த 5 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு, தாயகம் திரும்பினார்கள்.
5 மீனவர்களின் வழக்குச் செலவுக்காகவும், அவர்கள் சிறையில் இருந்த போது அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்காகவும், மீனவர்கள் இந்தியா திரும்பியதும், புது வாழ்வு தொடங்குவதற்கு எனவும், மொத்தம் 63 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வழங்கிய ஜெயலலிதாவுக்கும், தமிழக அரசுக்கும் இந்தப் பேரவை பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்கள் விடுவிக்கப்பட நடவடிக்கை எடுத்த, பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் தனது பாராட்டையும், நன்றியையும், இந்த மாமன்றம் தெரிவித்துக் கொள்கிறது.
கடல் எல்லையைக் கடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 38 மீனவர்கள் உடன் விடுவிக்கப்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என மத்திய அரசை இந்த மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.
இதுவன்றி, இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டு, அவர்கள் வசம் உள்ள 79 மீன்பிடிப் படகுகளை விடுவித்திட தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்த மாமன்றம் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது'' என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
கச்சத்தீவை மீட்க தீர்மானம்
தமிழக மீனவர்கள் எவ்வித இன்னலுமின்றி தங்களுடைய வாழ்வாதாரத்தை மேற்கொள்ள ஏதுவாக கச்சத் தீவை திரும்பப் பெறவும், பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமையை இலங்கை அரசு தடுக்காமல் இருப்பதற்கும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டுமென தமிழக சட்டப் பேரவை கேட்டுக் கொள்கிறது என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), கதிரவன் (பார்வர்டு பிளாக்) டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஜவாஹிருல்லா (மமக), கணேஷ்குமார் (பாமக), கலையரசு (பாமக அதிருப்தி எம்எல்ஏ) விஜயதாரணி (காங்கிரஸ்), குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்), கு.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகியோர் ஆதரவு தெரிவித்து, வரவேற்று பேசினர்.