பக்ரைன் நாட்டில் மர்மமாக இறந்த கணவர்...உடலை மீட்டுத் தரக் கோரி மனைவி, உறவினர்கள் கலெக்டரிடம் மனு
தூத்துக்குடி: பக்ரைன் நாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தர வேண்டும் என்று கோரி மனைவி மற்றும் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு அம்மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் முருகையா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
அப்போது, தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தை சேர்ந்த எஸ்.பாரிஷா என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் காஜாமைதீன் பக்ரைன் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த 17-7-15 அன்று மர்மமான முறையில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளார். இந்த தகவலை அங்கு பணியாற்றும் வேறு ஒருவர் மூலம் 10 நாட்களுக்கு பிறகு அறிந்து கொண்டோம். ஆனால் இதுவரை எனது கணவர் வேலை செய்த நிறுவனத்திடம் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் உரிய விசாரணை நடத்தவும், எனது கணவரின் உடலை தூத்துக்குடிக்கு கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் சி.நயினார் குலசேகரன் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘2015-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி பாசனத்தில் முறையான சாகுபடிக்கு அனுமதி அளிக்காததால் விவசாயிகள் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தரிசாக போடும் நிலை உருவாகி உள்ளது. இதனால் சுமார் 3 லட்சம் குவிண்டால் நெல் அரசுக்கும், ரூ.40 கோடி விவசாயிகளுக்கும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு பொதுப்பணித்துறையின் நீர் ஆதார அமைப்பே காரணம் ஆகும். ஆகையால் இழப்பு ஏற்படுத்திய ஸ்ரீவைகுண்டம், நெல்லை பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
வாழவல்லான் கிராம மக்கள் அளித்த மனுவில், ‘ஏரல் பேரூராட்சிக்கு சொந்தமான பஸ்நிலையம், வானொலி நிலையம், கக்கன் பூங்கா ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனை மீட்டு பொதுமக்கள் உபயோகத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என கூறப்பட்டுள்ளது.