முந்திக்கொண்ட பிரதமர் மோடி.. வேறு வழி இல்லாமல் பத்திரிக்கையாளர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர்
மூத்த பத்திரிக்கையாளர் மோகன் மறைவிற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை : மூத்த பத்திரிக்கையாளரும் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான மோகன் மறைவிற்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றியவரும், கடின உழைப்பாளியும் அனைவரிடமும் எளிமையாக பழகக் கூடியவர் மோகன். மாரடைப்பால் அவர் காலமான செய்தியை அறிந்து துயரம் அடைந்தேன்.

மோகனின் மறைவு பத்திரிக்கை துறைக்கு பேரிழப்பாகும். மோகன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் பத்திரிகை துறை நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். இதனையடுத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மோகன் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்தார்.

பிரதமர் மோடி மூத்த பத்திரிக்கையாளர் மோகனின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்தது பத்திரிக்கையாளர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. இந்நிலையில் பிரதமரே வந்து இரங்கல் தெரிவித்த பிறகு முதல்வர் பழனிசாமி இன்று பிற்பகலில் பத்திரிக்கையாளர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications