50 எம்.பிக்கள் இருந்து என்ன பயன்... ஒப்புக்கு "ஜிஓ" போட்டு மாணவர்களை ஏமாற்றியதா தமிழக அரசு?
சென்னை: தமிழக அரசு பாடத் திட்டத்தில் கல்வி பயின்ற மாணவர்களை அரசு ஏமாற்றி விட்டதா என்று எண்ண வைத்துவிட்டது ஹைகோர்ட் இன்று பிறப்பித்த உத்தரவு.
ஜெயலலிதா முதல்வராக இருந்ததுவரை, நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெற்றுத்தந்து வந்தது தமிழக அரசு. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அரசு அதை பெற்றுத் தர இயலவில்லை.
லோக்சபா பலத்தின் அடிப்படையில், நாட்டின் 3வது பெரிய கட்சி என மார்தட்டி வந்த அதிமுக மத்திய அரசிடம் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. சட்ட போராட்டத்திலும் தோற்றது.

நீட் தேர்வில் சாதிக்கவில்லை
இந்த நிலையில், போதிய ஆயத்தமின்றியே நீட் தேர்வை எழுதினர் தமிழக மாணவர்கள். இதனால் நீட் தேர்வு ரிசல்ட் வெளியானபோது தமிழக மாணவர்கள் சோபிக்கவில்லை என்பது கண்கூடாக தெரிந்தது.

கண்துடைப்பு
மக்களின் கோபம் தங்கள் பக்கம் திரும்புவதை அறிந்ததும், கண்துடைப்புக்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டது மாநில அரசு. அதன்படி, மாநில பாத் திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு என்றும் அறிவித்தது.

எச்சரிக்கை
இது கண்துடைப்பு நடவடிக்கை என்பதும், கோர்ட்டில் வழக்கு போட்டால் தாக்குப்பிடிக்காது என்றும் கல்வியாளர்கள் பலர் எச்சரிக்கைவிடுத்தனர். ஆனால், தமிழக அரசு மாற்று ஏற்பாடு செய்யவில்லை.

எதிர்பார்க்கப்பட்டது
ஏற்கனவே குஜராத்தில் இப்படி இட ஒதுக்கீடு உத்தரவு பிறப்பித்து அதை கோர்ட் தள்ளுபடி செய்தது. எனவே இன்று ஹைகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவு ரத்து செய்யப்பட்டதும் எதிர்பார்க்கப்பட்டதுதான் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

இட ஒதுக்கீடு சரியில்லை
மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு என்பது ஜாதி அடிப்படையில் இருக்கலாமே தவிர, இப்படியெல்லாம் இட ஒதுக்கீடு செய்ய முடியாது என்பது தமிழக அரசுக்கும் தெரிந்திருக்கும் என்று கூறுகிறார், சமூக சமத்துவ மருத்துவர்- ரவீந்திரநாத். கோர்ட்டும் கூட, இந்திய மருத்துவ கவுன்சில் நடைமுறைக்கு மாறாக இந்த அரசாரணை உள்ளதாக சுட்டிக்காட்டிவிட்டது.

மீண்டும் ஏமாற்ற முயற்சி
இப்போது மேல் முறையீடு செய்யப்போவதாக கூறியுள்ளது அரசு. ஆனால் இதெல்லாம் மாணவர்கள், பெற்றோர்கள் கோபத்தை திசைதிருப்பத்தானே தவிர, தமிழக ஹைகோர்ட்டின் தீர்ப்புதான் மேல்முறையீட்டிலும் எதிரொலிக்கும் என தெரிந்துவிட்டது. எனவே இந்த அரசை நம்பினால் மாணவர்கள் எதிர்காலம் வீணாகிவிடும் என்பது தெளிவாகிவிட்டது. எனவே நீட் தேர்வுக்கு அடுத்த ஆண்டு முதல் தயாராவதுதான் தீர்வாக இருக்கப்போகிறது.












Click it and Unblock the Notifications