தமிழக வறட்சி நிலை.. இரட்டை வேடம் போடும் அதிமுக அரசு... யாருக்காக பயப்படுகிறது?
தமிழகத்தில் வறட்சி நிலவுவதாக தொடர்ந்து கூறி வந்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று முழு வறட்சி இல்லை என்று பதிலளித்துள்ளதன் மூலம் அரசின் இரட்டை வேடம் அம்பலமாகிறது.
சென்னை : தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவுவதாகக் கூறி வந்த அரசு உச்சநீதிமன்றத்தில் முழுவறட்சி இல்லை என்று கூறி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி நீர் கைவிட, பருவமழையும் கானல் நீரானதால் தமிழக விவசாயிகளின் நிலை மிகவும் மோசமானது. இந்நிலையில் கடனைத் திருப்பி செலுத்த வங்கிகளும் நெருக்கடி கொடுத்ததால் மனமுடைந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து மத்திய அரசிடமிருந்து நிதியை பெற்று நிவாரணமாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் போராடி வந்தனர்.
இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிகக்குறைவாக பெய்துள்ளதால், அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படுவதாகக் கூறினார். மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் நலன் காக்கும் வகையில் விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும், விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன் மத்திய காலக் கடனாக மாற்றியமைக்கப்படும் என்பன உள்ளிட்ட 15 சலுகைகளை அறிவித்தார்.
பழனிசாமியின் பிப்ரவரி அறிவிப்பு
இவருக்கு அடுத்தபடியாக முதல்வராக வந்த பழனிசாமியும் கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி விவசாயிகளுக்கு 2,247 கோடி ரூபாய் பயிர் இழப்பு வறட்சி நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். தமிழ்நாட்டில் அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை 440 மி.மீ. மழைக்கு பதிலாக 168.03 மி.மீ, கிடைத்துள்ளதால், கடந்த 140 ஆண்டுகளில் இது போன்ற குறைந்த மழையளவை தமிழ்நாடு சந்தித்தில்லை என்று கூறியிருந்தார்.
ஆமாம் சாமீ போட்ட அமைச்சர்
இதனால் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது என்றும் பழனிசாமி கூறியிருந்தார். தமிழகம் முழுவதும் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையின் போதும் கூட அடிக்கடி உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி சொன்ன ஒரே பதில், இது இயற்கையின் செயல் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை சமாளிக்க தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்றும் கூறியிருந்தார்.
அபத்தம்
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விவசாயிகள் தற்கொலை தொடர்பான வழக்கில் பதிலளித்த தமிழக அரசு தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலைக்கு வறட்சி காரணமில்லை. வறட்சியால் யாரும் இறக்கவே இல்லை, வயது முதிர்வு, நோய் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று அண்டப் புளுகை சொன்னது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், விவசாய அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
பதுங்கிக் கொண்ட அரசு
இதனிடையே அந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று நடந்த போது தமிழகத்தில் முழு வறட்சியில்லை என்று அடுத்த பதிலைக் கூறியுள்ளது. தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி என்று அறிவித்துவிட்டு சலுகை மேல் சலுகைகளை அள்ளி விட்டன. ஆனால் அரசு அறிவித்த வறட்சி போதாது மேலும் அதிக நிதி பெற்றுத் தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இரட்டை வேஷம் ஏன்?
கூடுதல் நிவாரணம் பெற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அரசு தமிழகத்தில் முழுவறட்சி இல்லை என்று அறிவித்தன் மூலம் ஊற்கனவே நிவாரண நிதி கொடுப்பதில் பாராமுகமாக இருக்கும் மத்திய அரசுக்கு சாதகமாகிவிடும். இந்நிலையில் இங்கே வறட்சி வறட்சி என்று குய்யோ முறையோ என்று கூவிக் கூவி அறிவித்துவிட்டு, சத்தமில்லாமல் முழு வறட்சி இல்லை என்று இரட்டை வேஷம் போடுகிறது தமிழக அரசு. விவசாயிகளின் உரிமைய காக்க வேண்டிய அரசு யாருக்கு பயந்து இந்த இரட்டை வேடம் போடுகிறது என்பதே அனைவர் மனதிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.