பெரியாரின் சமூக நீதி பாதை.. அண்ணாவின் பொன் மொழி.. அட ஆளுநர் புரோஹித்தா இப்படி.. வியப்பு!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் இன்று தனது உரையில் பெரியார் மற்றும் அண்ணா குறித்து பேசியது பெரிய வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சட்டசபையின் 16வது கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையுடன் இந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை பாராட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களை ஆளுநர் புரோஹித் இன்று சபையில் அறிவித்தார். இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்களை பாராட்டியும் அவர் பேசினார்.
ஆளுநர்
இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் தனது உரையில் அண்ணா மற்றும் பெரியார் குறித்தும் பேசி உள்ளார். அவர் பேசியதாவது, ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பது அண்ணாவின் பொன்மொழி. அண்ணாவின் மொழிக்கு ஏற்ப தமிழ்நாடு திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமத்துவத்தையும், சமூக நீதியையும் மையமாக வைத்து இந்த தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
சமத்துவம்
சமத்துவத்தை அடித்தளமாக பாரபட்சம் இன்றி அனைவருக்கமான அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. தந்தை பெரியார் காண விரும்பிய சமூக நீதி & சுயமரியாதைதான் தமிழ்நாட்டின் கொள்கை. சம வாய்ப்பு கொண்டு சமூகமாக தமிழ் நாட்டை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
உரிமை
அனைத்து உரிமைகளும் கொண்டவர்களாக மக்களை மாற்றவும், எல்லா வளமும் அடங்கிய மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, என்று ஆளுநர் புரோஹித் தனது உரையில் அரசை பாராட்டி, புகழ்ந்து பேசி உள்ளார். பொதுவாக ஆளுநர் உரை என்பதே அரசை பாராட்டும் உரையாகவே இருக்கும்.
திட்டம்
அரசின் திட்டங்களை பாராட்டி, ஆளுநர் பேசுவது வழக்கம்தான். சமயங்களில் லேசான விமர்சனங்களையும் ஆளுநர் தனது உரையில் வைக்கும் வழக்கம் உண்டு. ஆனால் இன்று ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் பேசியது அரசை பற்றிய புகழுரை என்பதை தாண்டி, அரசின் கொள்கைகளை, தமிழ்நாட்டின் திராவிட கருத்துக்களை புகழ்ந்து உரைக்கும் விதமாக அமைந்தது.
முன்னாள் நிர்வாகி
முன்னாள் ஆர்எஸ்எஸ் நிர்வாகி, பாஜக காரர் என்று பல்வேறு அடையாளங்களை கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதற்கு முந்தைய ஆட்சியில் கூட திராவிட கொள்கைகள் குறித்து இப்படி பேசியது இல்லை. ஆனால் இந்த முறை பெரியார், அண்ணா என்று திராவிட ஆணிவேர்களை புகழ்ந்து பேசியது மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
ஆளுநர்
அரசும் ஆளுநரும் இணக்கமாக செல்ல தொடங்கி இருப்பதையே இது காட்டுகிறது. முக்கியமாக கொரோனா நிவாரண நிதியாக ஆளுநர் 1 கோடி ரூபாயை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்ததில் இருந்தே, ஆளுநருக்கும் அரசுக்கும் இடையில் கொஞ்சம் சுமுகமான உறவே நீடிக்கிறது. மாநில உரிமைகளை நிலைநிறுத்துவதிலும், எந்த மோதலும் இன்றி ஆக்கபூர்வமான அரசியல் செய்யவும் கண்டிப்பாக இது வழிவகுக்கும்!