தகாத முறையில் நடக்க முயற்சித்தார்.. குளித்ததை பார்த்தார்.. சர்ச்சைகளில் சிக்கும் தமிழக ஆளுநர்கள்
Recommended Video
சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவது எவ்வளவு அபத்தமான கட்டத்தில் போய் நிற்கிறது என்பதற்கு இன்றைய சம்பவம் பெரிய சாட்சி.
கடலூர் மாவட்டத்திற்கு ஆய்வுக்கு சென்ற ஆளுநர், வண்டிப்பாளையம் பகுதியில் கழிவறைகள் பராமரிப்பு பற்றி ஆய்வு நடத்தினார்.
அப்போது, ஓலை கீற்றுக்கு அருகே நின்று எட்டிப்பார்த்ததாகவும், அங்கே ஒரு பெண் குளித்துக்கொண்டு இருந்ததாகவும், ஆளுநர் வருகையால் அந்த பெண் கத்தி கூச்சல் போட்டதாகவும் கூறப்படுகிறது.
சர்ச்சை
பெரிய பாதுகாப்பு படையுடன் ஆளுநர் செல்லும்போது, அதற்கு முன்னாள் யார் இருக்கிறார்கள் என்பதை போலீசார் சோதனையிட்டிருப்பார்கள். அப்படியிருந்தும், ஆளுநர் ஏதோ திடீரென அங்கு போய் நின்று கீற்றுக்கு அந்தபக்கம் பார்த்ததை போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்த அளவுக்கு உண்மை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஊடகங்கள் சிலவற்றில் இந்த செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சையில் சென்னா ரெட்டி
ஏற்கனவே தமிழகத்தில் ஆளுநர் சென்னா ரெட்டி இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கியிருந்தார். தமிழக ஆளுநராக எம்.சென்னாரெட்டி இருந்த காலம் அது. முதல்வராக ஜெயலலிதா முதல் முறை அதிகாரத்திற்கு வந்திருந்ததும் அந்த காலகட்டம்தான். 1993 ஆகஸ்ட் மாதம் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. பெருத்த சேதத்துடன் உயிர் பலியும் ஏற்பட்டது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி பதறியடித்து ஓடிவந்து நேரடியாக வந்து கள ஆய்வு செய்தார். ஆளுநர் அங்கு சென்றதற்கு, ஜெயலலிதா கடுமையான ஆட்சேபணை எழுப்பினார்.
ஜெயலலிதா விடவில்லை
1995ல் மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற சென்னாரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆனால் அதையும் எளிதில் விடவில்லை ஜெயலலிதா. ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதினார். சென்னாரெட்டி வாகன அணிவகுப்பைத் திண்டிவனம் அருகே வழிமறித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி ஷாக் கொடுத்தனர்.
தகாத முறையில்
சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோதுதான், தன்னிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று ஜெயலலிதா குற்றம் சாட்டினார். அப்போதைய தூத்துக்குடி எம்.எல்.ஏ. ரமேஷ் தலைமையில் அதிமுகவினர் ராஜ்பவனுக்கு ஊர்வலமாகச் சென்று ஆளுநருக்கு நெருக்கடியை அதிகரித்தனர். இந்த நிலையில் மீண்டும் தமிழக ஆளுநர் ஒருவர் மீது பெண் தொடர்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.