அரசே மதுபானம் விற்பதை சட்டப்படி குற்றமாக அறிவிக்க வேண்டும்.. மனுவை ஏற்றது கோவை நீதிமன்றம்
கோவை: உடலுக்கு ஊறுவிளைவிக்கும் ஆல்கஹால் கலந்த மதுவை அரசே விற்பனை செய்வது சட்டப்படி தவறு என்று அறிவிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கோவை போத்தனூரை சேர்ந்தவர் முகமதுரபீக். இவரது வக்கீல் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த 20ம் தேதி கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் "இந்திய தண்டனை சட்டம் 328-ன் கீழ் உயிருக்கு கேடு விளைவிக்கும் "ஆல்கஹால்" போன்ற போதை பொருளை வியாபாரம் செய்தல், இருப்பு வைத்தல் மற்றும் விற்பனையை யார் செய்தாலும் அது குற்றம் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசு வருமானத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு டாஸ்மாக் கடைகளின் மூலம் ஆல்கஹால் கலந்த மதுவை விற்பனை செய்துவருகிறது. இது, இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரானது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மது விற்பனையை தடை செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை கோவை ஏழாவது குற்றவியல் நடுவர் நீதி மன்ற நடுவர் ஹேமந்த்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
மதுவினால் ஏற்ப்படும் தீமைகள், மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தது, முகமதுரபீக் உள்பட மூன்று பேர் சாட்சியம் அளித்தனர். அதன்பின் இந்த வழக்கு தொடர்பான சட்ட வழிமுறைகள், சட்டத்தில் என்னென்ன அம்சங்கள் இதுகுறித்து உள்ளன என்பது குறித்து, வக்கீல் கிருஷ்ணமூர்த்தி வாதாடினார்.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை அடுத்த மாதம் 5ம் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு தள்ளிவைத்தார். அப்போது, எதிர்தரப்பாகிய தமிழக அரசு சார்ந்த 14 பேருக்கு சம்மன் அனுப்புவதற்கான முகவரிகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications