பணம் கொடுத்துப் பெறப்படும் இடம் மாறுதல்கள்... கோபத்தில் தென்மாவட்ட ஆசிரியர்கள்
நெல்லை: சிலர் பணம் கொடுத்து வேண்டிய பள்ளிகளுக்கு இடமாறுதல்களைப் பெற்றுக் கொள்வதால், மற்ற ஆசிரியர்கள் பெருமளவில் பாதிக்கப் படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். இதில் பல ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் அல்லாமல் வெகுதூரம் உள்ள பள்ளிகளில் பணி இடம் மாற்றம் செய்யப்படுவதால் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதில் ஏகத்துக்கும் பணம் புகுந்து விளையாடுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பலர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த மாவட்டத்துக்கு வரமுடியாமல் தவியாய் தவித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களில் பலருக்கு சீனியாரிட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர்கள் பலமுறை ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து தென்மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘தமிழக பள்ளி கல்வி துறை ஊழல் நிறைந்ததாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கவுன்சிலிங்கில் காலி பணியிடங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. அல்லது முழுமையாக காண்பிக்கப்படுவதில்லை. தூத்துக்குடி மாவட்டதில் கடந்த ஆண்டு எந்த பாடத்திற்கும் ஒரு இடம் கூட காண்பிக்கப்படவில்லை. பணம் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் முடிந்ததும் அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு அருகே உள்ள பள்ளிகளில் இடமாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சில குறிப்பிட்ட ஆசிரியர்களே பணம் வாங்கி கொடுக்கும் புரோக்கர்களாக செயல்பட்டு வருகின்றனர். ஒரு பணியிட மாற்றத்துக்கு அமைச்சர், உயர் அதிகாரிகள் என ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை விலை பேசப்படுகிறது.
குறிப்பாக குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு மாறுதலாகி வருவதற்கு தான் அதிக பணம் கொடுக்கப்படுகிறது. பண வசதி இல்லாத ஏழை, எளிய ஆசிரியர்கள் கவுன்சிலிங்கையே நம்பி பதிவு மூப்பில் இடம் இருந்தாலும் இடமாறுதல் கிடைக்காமல் குடும்பத்தை பிரித்து பல வருடங்களாக வாடி வருகின்றனர். இவ்வா்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பலர் வெறுப்பில் இருக்கின்றனர். இப்படி இருந்தால் அரசு பள்ளி மாணவர்கள் பொது தேர்வில் எப்படி சாதிப்பார்கள். ஆசிரியர்கள் சங்கங்களை சேர்நதவர்கள் தங்கள் சுய தேவைகளுக்கு மட்டுமே அவற்றை பயன்படுத்தி கொள்கின்றனர். இந்த பிரச்சனையை ஆராய்வதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை' என இவ்வாறு அவர்கள் தெரிவிக்கி்ன்றனர்.












Click it and Unblock the Notifications