காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு மறுப்பது ஏன் ?: அன்புமணி ராமதாஸ்
காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு மறுப்பது ஏன் என்று அன்புமணி கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் இருக்க எதற்காக நடப்பாண்டில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படமாட்டார்கள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது என்று பாமக இளைஞரணித் தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 2018-19ம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் புதிய ஆசிரியர்கள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை.
இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குற்றச்சாட்டுகள் உண்மை
தமிழக அரசின் மேல் நிலைப்பள்ளிகளில் 1640 ஆசிரியர் பணியிடங்கள், உயர்நிலைப்பள்ளிகளில் 2405 பணியிடங்கள் உட்பட 4963 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் புதிய ஆசிரியர்களை நியமிக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படியும், தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கை மனுவுக்கு அளித்த பதிலிலும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் மூலம் இக்குற்றச்சாட்டுகள் உண்மை என்பது உறுதியாகியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அறிக்கை
தமிழக அரசு பள்ளிகளில் 349 தமிழாசிரியர்கள், 273 ஆங்கில ஆசிரியர்கள், 490 கணித ஆசிரியர்கள், 773 அறிவியல் ஆசிரியர்கள், 520 சமூக அறிவியல் ஆசிரியர்கள் என மொத்தம் 2405 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அளித்துள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது 5.3.2018 அன்றுள்ள நிலவரமாகும். 1.12.2017 அன்று நிலவரப்படி காலியிடங்கள் எண்ணிக்கை 2084 ஆகும். இதில் மாவட்ட வாரியான காலியிடங்களைப் பார்த்தால் 78சதவீதம் காலியிடங்கள் வட மாவட்டங்களில் தான் உள்ளன.

ஆயிரக்கணக்கில் காலியிடங்கள்
அதிலும் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 383 காலியிடங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 381, வேலூர் மாவட்டத்தில் 335, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 271 என 4 மாவட்டங்களில் மட்டும் 1370 காலியிடங்கள் உள்ளன. இது மொத்த காலியிடங்களில் மூன்றில் இரண்டு பங்காகும். மாநிலத்தின் மொத்த காலியிடங்களில் 66 சதவீதம் காலியிடங்களை 4 மாவட்டங்களில் மட்டும் வைத்திருப்பது அந்த மாவட்டங்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதைத் தவிர வேறில்லை.

தமிழக அரசின் கடமை
இந்த நிலை இன்று... நேற்றல்ல... 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த காலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதங்களில் இந்த மாவட்டங்கள் தான் கடைசி 5 இடங்களில் மாறி மாறி வருகின்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. தமிழ்நாட்டில் கடந்த 2013, 2017-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்ற 30 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்களுக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை. அவர்களுக்கும் வேலை வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும்
எனவே, இப்போது காலியாக உள்ள பணியிடங்கள், விரைவில் காலியாகும் பணியிடங்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு உடனடியாக நிரப்ப வேண்டும். கிராமப்புற பகுதிகள், தொலைதூரப் பகுதிகள் ஆகியவற்றில் பணியாற்ற ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு சிறப்புப் படி, பதவி உயர்வில் முன்னுரிமை ஆகியவற்றையும் வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications