உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது-ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
தஞ்சை பெரியகோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்
Recommended Video
தஞ்சை: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் இன்று காலை வெகுவிமரிசையாக தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் தஞ்சை பெரியகோவிலின் சித்திரை திருவிழா, பல்லாண்டு காலமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நிலையில் தேர் சிதிலமடைந்ததை தொடர்ந்து 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.
இதையடுத்து தஞ்சை பெரியகோவிலுக்கு புதிதாக தேர் செய்யப்பட்டதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டமும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதன் முக்கிய விழாவான தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். மங்கள வாத்தியங்கள் இசைக்க, அலங்கரிப்பட்ட 42 அடி உயரமுள்ள தேரை பக்தர்கள் முழக்கத்துடன் வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக மேலராஜவீதியில் 3 இடங்களிலும், வடக்குராஜவீதியில் 4 இடங்களிலும், கீழராஜவீதியில் 4 இடங்களிலும், தெற்குராஜவீதியில் 3 இடங்களிலும் தேர் நிறுத்தப்படுகிறது. பின்னர் தேர் நிலை மண்டபத்தை வந்தடைகிறது. தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு தஞ்சையில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதுடன் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.