”இங்கு யாரும் அனாதை இல்லை”... வருகிறது தற்காலிக தத்து திட்டம்...
கோவை: சிறுவர் காப்பகங்களில் வளரும் ஆதரவற்ற சிறுவர்களை அரசின் நிதியுதவியோடு, தற்காலிகமாக தத்தெடுத்து வளர்க்கவும், கோர்ட்டின் அனுமதியோடு நிரந்தர வாரிசாக்கி கொள்ளவும், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு நல மையத்தின் சார்பில், 'தற்காலிக தத்து வளர்ப்பு திட்டம்' ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குடும்ப சூழ்நிலையால் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு வேலை செய்தல், பெற்றோர்களை இழந்து தனித்து விடப்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தெருக்களில் சுற்றி திரியும் சிறார்களை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு நல மையத்தின் சார்பில் மீட்டு காப்பகங்களில் தங்க வைப்பதுடன் அடிப்படை கல்வி பெறவும் வழிவகை செய்யப்படுகிறது.
இந்த குழந்தைகளுக்கு, குடும்ப சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவும், குழந்தை இல்லாதவர்களுக்கு தத்து எடுத்து வளர்க்க வாய்ப்பளிக்கவும் அரசின் சார்பில் 'தத்து குழந்தைகள் மையம்' செயல்பட்டு வருகிறது.
ஆனால்,குழந்தைகளின் வளர்ச்சி முழுவதற்கும் உதவ முடியாத நிலையில் தத்து எடுக்க விரும்புவோருக்காக அரசின் நிதியுதவியுடன் கூடிய, 'தற்காலிக தத்து வளர்ப்பு' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக தத்து வளர்ப்பு திட்டப்படி, பிறந்த குழந்தை முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை, தத்து எடுத்துக் கொள்ள முடியும். குழந்தை இல்லாதவர்கள், குழந்தை இருந்தும் மற்ற குழந்தைகளுக்கு உதவ நினைப்போர், இத்திட்டத்தின் வாயிலாக குழந்தைகளை தத்து எடுத்துக் கொள்ளலாம்.
இதன்படி, தத்து எடுக்க விரும்புவோரது வயது வரம்பு, பொருளாதாரம் மற்றும் சமூக பின்னணியை ஆய்வு செய்து ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு நல மையத்தின் குழந்தைகள் நலக்குழுவின்பரிந்துரைப்படி குழந்தைகள் தத்து அளிக்கப்படுகின்றனர்.
இதற்கு, தத்து எடுப்போர் மற்றும் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளின் விருப்பத்தை அடிப்படையாக கொண்டு குழந்தைகள் நலக்குழு அனுமதி அளிக்கிறது.
இப்படி தற்காலிகமாக தத்து எடுப்போர் கோர்ட்டின் அனுமதியோடு அக்குழந்தையை நிரந்தர வாரிசாக்கி கொள்ளவும் முடியும்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நான்கு பேர் தற்காலிகமாக சிறுவர்களை தத்தெடுக்க முன்வந்துள்ளனர்.
இதுபற்றி ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு நல மைய அதிகாரிகள் கூறுகையில்,''வாரிசு இல்லாதவர்கள், தனித்து விடப்படும் சிறார்களுக்கு உதவ நினைப்போர், தற்காலிக தத்து வளர்ப்பு திட்டத்தின் வாயிலாக, ஆதரவற்ற சிறார்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியும்.
தத்தெடுக்க வருவோருக்கு, உளவியல் ஆலோசனை வழங்கிய பின் குழந்தைகள் நலக்குழுவின் ஒப்புதல் பெற்று சிறார்கள் ஒப்படைக்கப்படுகின்றனர்.
மேலும், சிறார்களை வளர்க்க பொருளாதார உதவி தேவைப்படும் பட்சத்தில் அரசின் சார்பில், மாதந்தோறும் 750 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தத்தெடுக்க நினைப்போர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு நல மையத்தை அணுகலாம்,'' என்றனர்.