நம்ம அவஸ்தை நீதிபதிகளுக்கு என்ன தெரியும்... சிவகாசியில் "வெடித்த" ராஜேந்திர பாலாஜி!
சிவகாசியில் பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் அவஸ்தை நீதிபதிக்கும், நீதிமன்றங்களுக்கு எங்கிருந்து தெரியும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகாசி: பட்டாசு தொழிலுக்கு, நடைமுறைக்குப் பொருந்தாத விதிமுறைகளை வகுத்துள்ள நீதிபதிகளுக்கு அதில் பணியாற்றும் தொழிலாளர்களின் அவதி தெரியாது என்று பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
சீன பட்டாசுகளின் வருகையால் அழிவின் விளிம்பில் உள்ள பட்டாசுத் தொழிலுக்கு வகுத்துள்ள புதிய விதிமுறைகளை மாநில அரசு நீக்க வேண்டும் என்று கோரி சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள், உரிமையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொள்ள வந்த அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி அவர்களிடையே ஆவேசமாக பேசினார். அவரது பேச்சு:
சரியா வகுத்துக் கொடுக்கனும்
மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, நீதிமன்றங்களானாலும் சரி நடைமுறைக்கு சாத்தியமான விதிமுறைகளைத்தான் வகுத்துத் தர வேண்டும்.
நான்கு வழிச்சாலையில் கூடத்தான்
நான்கு வழிச்சாலைகளில் கூட விபத்துகள் நடக்கின்றன, அதற்காக நான்கு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தாமலோ, பயன்படுத்தாமலோ நாம் இல்லை.
கோர்ட் சொல்லும் விதிமுறைகள்
பட்டாசு தொழிலுக்கான புதிய நடைமுறையை விதிதத்து மத்திய அரசோ, மாநில அரசோ கிடையாது. கோர்ட்டினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு விதிமுறையாகும். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்படுவர் என்பது நீதிமன்றத்துக்கும் தெரியாது, நீதிபதிகளுக்கும் தெரியாது.
எடப்பாடியை சந்திக்கனுமா.. !
இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிச்சாமியை சந்திக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்கிறேன் என்றார் ராஜேந்திர பாலாஜி.