சிதைந்து சின்னாபின்னமாகும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு
அதிமுகவினர் கோவிலாக வணங்கும் போயஸ்கார்டன் வீடு நாளுக்கு நாள் சிதைந்து சின்னாபின்னமாகி வருகிறது.
சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வீடு இப்போது சிதைந்து சின்னாபின்னமாகி வருகிறது. பராமரிக்க ஆள் இல்லாமல் பொலிவிழந்து கொண்டிருக்கிறது. அரசு நினைவில்லமாக மாற்ற முடிவெடுத்ததே பராமரிப்பு செலவை கவனிக்க முடியாமல்தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் போயஸ் தோட்ட வீட்டிற்கு உரிமை கொண்டாடும் தீபக், தீபாவிற்கு ஆப்பு வைக்கும் நோக்கத்திலேயே வேதா நிலையத்தை நினைவில்லாமாக்க எடப்பாடி பழனிச்சாமி அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவினால் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவருக்குப் பின்னர் அந்த வீட்டில் வசித்து வந்த சசிகலாவும் இப்போது சிறை சென்று விட்டார்.

போயஸ்தோட்ட வீடு
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகளால் போயஸ்கார்டன் உள்ள பின்னி சாலை நிரம்பி வழியும். காணும் இடமெங்கும் கரை வேஷ்டிகள் சூழ்ந்திருப்பார்கள். பூங்கொத்துக்களால் வேதா நிலையம் நிரம்பி வழியும், கட் அவுட்கள் சூழ்ந்திருக்கும். எல்லாம் டிசம்பர் 5 வரைதான், அதன்பிறகு எல்லாதே மாறி விட்டது.

ஜெயலலிதா மரணம்
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு வேதா நிலையத்தின் நிலை தலைகீழாகி விட்டது. ஜெயலலிதாவை கடவுளாகவும், வேதா நிலையத்தையும் கோவிலாக வழிபட்ட மக்கள் யாரையும் இப்போது காணவில்லை. வேதாநிலையத்தில் இருந்த தோட்டங்கள் கூட சரியான பராமரிப்பு இன்றி மலர்கள், செடிகள் வாடிவிட்டன.

மயான அமைதி
பால்கனி, வராண்டா எல்லமே சூனியமாக காட்சியளிக்கின்றன. பின்னி சாலையே ஒருவித மயான அமைதியாக காட்சியளிக்கிறது. சசிகலா இருந்தவரை கூட தொண்டர்கள், நிர்வாகிகள் வந்து சென்றனர். சசிகலாவும் சிறை சென்று 100 நாட்களுக்கு மேலாகிவிட்டது.

ஜெயலலிதா ஆன்மா
இரவு நேரங்களில் ஜெயலலிதாவின் ஆன்மா அலறும் சத்தம் கேட்பதாக பலரும் வதந்தியை கிளப்பி விடுவதால் மன்னார்குடி குடும்பத்தினர் போயஸ்தோட்ட வீட்டிற்குள் செல்லவே அச்சமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நினைவில்லம்
ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவோம் என்று ஓ. பன்னீர் செல்வம் கூறி வந்தார். இதன் காரணமாகவே தீபா அவருடன் இணையாமல் தனி ஆவர்த்தனம் நடத்தினார். போயஸ்தோட்ட வீடு எங்க பாட்டியோடது நாங்கதான் வாரிசு என்று கூறினார். ஆனால் இப்போது உள்ள எடப்பாடி பழனிச்சாமி அரசு ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற முடிவு செய்துள்ளது.

தீபா, தீபக்கிற்கு செக்
போயஸ் தோட்ட வீட்டினை பராமரிக்க அதிக செலவாகிறது. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிகமான பணியாளர்கள் யாரும் போயஸ்தோட்ட இல்லத்தில் வசிக்கவில்லை. தீபாவும், தீபக்கும் வாரிசுகள் என்று உரிமை கோரி வரும் நிலையில் அவர்களுக்கு செக் வைக்கும் விதமாகவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

நாடகம் போடுகிறார்கள்
.பி.எஸ், இ.பி.எஸ். இரு அணிகளின் போலி வேடதாரிகளை அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அடையாளம் கண்டு எனது தலைமையில் லட்சக்கணக்கான தொண் டர்கள் எழுச்சியோடும், உணர்ச்சியோடும் செயல்பட்டு வருவதை சகிக்க முடியாத கூட்டம் என் வளர்ச்சியைத் தடுப்பதற்காக நினைவு இல்ல நாடகத்தை போடுகிறார்கள் என்பது தீபாவின் கருத்து.

பூர்வீக சொத்துக்கள்
ஊழல் கறைபடிந்த கூட்டம், நினைவு இல்லம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தை அபகரிக்க தீய திட்டம் தீட்டியுள்ளார்கள். என் அத்தைக்கு சொந்தமான, அனைத்து பூர்வீக சொத்துக்கள் அதனை முறைப்படி பராமரிக்கும் உரிமை முழுமையாக எனக்கும், சகோதரர் தீபக்குக்கும் மட்டும் உள்ளது.
சிதைந்து வரும் வீடு
பிறகு வரும் காலங்களில் முறையாக அதிமுகவின் கோட்டையாக அந்த புனித இல்லத்தை கட்டிகாப்பது எனது கடமையாகும். தற்போது உள்ள அமைச்சரவைக்கு இந்த நடவடிக்கை எடுக்கும் உரிமை எந்த அடிப்படையில் உள்ளது என்று கேட்டுள்ளார் தீபா. இப்படி ஆள் ஆளுக்கு உரிமை கொண்டாடினாலும் கவனிப்பாரற்ற பிள்ளை போலவே படிப்படியாக சிதைந்து சின்னாபின்னமாகி வருகிறது வேதா நிலையம். எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன் என்று அந்தப்பக்கமாக செல்லும் மக்களிடம் சொல்லாமல் சொல்கிறது அந்த வீடு.












Click it and Unblock the Notifications