'கங்கையால் தாமரை மலரும்'.. தமிழிசைக்குத்தான் எவ்வளவு நம்பிக்கை பாருங்களேன்!
ஆர்கே.நகரில் கங்கையால் தாமரை மலரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே.நகரில் கங்கையால் தாமரை மலரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாஜக வெற்றி பெற்றால் ஆர்கே.நகர் தொகுதி பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இன்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுடன் சேர்ந்து கங்கை அமரன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்.கே.நகர் தொகுதியில் சாலை, குடிநீர் உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
மோடியின் தாக்கம் மற்றும் ஆக்கம் தமிழகத்திலும் பிரதிபலிக்கும் என்றும் அவர் கூறினார். ஆர்கே.நகர் தொகுதியில் நிச்சயம் பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆர்கே.நகரில் கங்கையால் தாமரை மலரும் என்றும் அந்த ஒரு தாமரை 100 ஆகும் என்றும் கங்கை அமரனை முன்னிலைப்படுத்தி தமிழிசை பேசினார். மேலும்
ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் ஆர்கே.நகர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் என்றும் தமிழிசை கூறினார்.